தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அசாதாரண சூழல் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவும் துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலே அசாதாரண சூழலை தொடர்ந்து மகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழல் நிலவுவதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
அதனால், தமிழரசியல் கைதிகளுடைய குடும்பத்தினர், சிறைகளில் இருக்கின்றதங்களின் உறவுகளை எண்ணி, மிகவும் துயரத்தோடு பரிதாபகரமான நிலையில் காணப்படுகின்றனர்..
தமிழ் அரசியல் கைதிகள் 31 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே குறிப்பாக, மகசின் சிறைச்சாலையிலே நாலு தமிழ் அரசியல் கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையிலே மூன்று பேரும், கண்டி போகம்பரையிலே இரண்டு பேரும், அம்பாந்தோட்டை தங்காலை பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஒருவருமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் 31 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே காணப்படுபவர்கள். இவ்வாறான பாதுகாப்பற்ற சூழல் வந்து, அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளுடைய பாதுகாப்பை இந்த அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்திலே, ஆனந்த சுதாகரனுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தொடர்பாக ஆனந்த சுதாகரன் உடைய தாயார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறைச்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலாலே, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு உயிர் அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இந்த விடயத்தை கருத்திலே கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களை விரைவாக விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல, சிறைச்சாலையிலே ஏற்பட்ட அசாதாரண சூழல் சம்பந்தமாக அங்கிருந்து மாற்றப்பட்ட கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிகிறோம்.
அதனை உடனடியாக சிறைச்சாலை நிர்வாகம் தலையிட்டு நிறுத்த வேண்டும். கடந்த காலங்ககளில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டன.
கடந்த காலத்திலே வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் , அங்கிருந்த முழு கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.
அதிலே குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளான, டில்ருக்சன் மற்றும் நிமலரூபன் ஆகிய இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகளாலே அடித்துச் சாகடிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, இதே போல் ஒரு சூழல் இப்போது ஏனைய கைதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.