டொராண்டோவைச் சேர்ந்த, வன்முறை மற்றும் நீண்டகால குற்றப் பின்னணியைக் கொண்ட 51 வயதுடைய நபர் ஒருவர், கொலை முயற்சி மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அவரது வழக்கு விசாரணை முடியும் வரை சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(எச்சரிக்கை: இந்தச் செய்தி அறிக்கை வாசகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய விபரங்களைக் கொண்டிருக்கலாம்).
டொராண்டோவைச் சேர்ந்த கெர்ஜி கோர்பர்ன் (Gergy Gorburn) என்ற நபருக்கான பிணை மறுஆய்வு (bail review) திங்கள்கிழமை காலை ‘பெரி’ (Barrie) நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிசிசாகா (Mississauga) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரைக் கடத்தி, ஒரிலியா (Orillia) நகரிலுள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கட்டிவைத்து, கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோர்பர்னுக்கு பிணை வழங்க முடியாது என சமாதான நீதிவான் (Justice of the Peace) கூறி எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்த மறுஆய்வு விசாரணை இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து சமாதான நீதிவான் அதிக முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை, தங்களால் முன்மொழியப்பட்ட கடுமையான பிணை நிபந்தனைகளைப் போதியளவில் பரிசீலிக்கத் தவறி சட்டத் தவறிழைத்துள்ளார் என்று பிரதிவாதி (Gorburn) தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.
இருப்பினும், இந்த வாதத்தை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி டோனா கெல்வே (Superior Court Justice Donna Kellway), சமாதான நீதிவான் கோர்பர்னைத் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டதில் எந்தவொரு சட்டத் தவறும் இல்லை என்று கூறி, அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
CTV News பெற்றுக்கொண்ட நீதிமன்றப் பதிவுகளின்படி, தற்போது 51 வயதாகும் கோர்பர்ன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகால குற்றப் பின்னணியைக் கொண்டவராவார். அவர் தாக்குதல், ஆயுதங்களுடனான கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களுக்காகக் குறைந்தது 15 தடவைகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
கைவிடப்பட்ட கட்டடத்தில் காயங்களுடன் நபர் ஒருவர் மீட்பு: ஒரிலியாவில் ஐந்து சந்தேகநபர்கள் கைது
டொராண்டோ பெரும் பகுதியைச் (GTA) சேர்ந்த ஐந்து பேர் இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கோர்பர்னுடன் சேர்ந்து டுவைன் பென்னண்ட் (Dwayne Pennant), மன்ராஜ் மான் (Manraj Mann), பால்டேஜ் சாந்து (Baltej Sandhu) மற்றும் சுர்ஜித் சிங் பெயின்ஸ் (Surjit Singh Bains) ஆகியோரே கைது செய்யப்பட்ட ஏனைய நபராவர். ஒரிலியா நகரின் கோல்போர்ன் மற்றும் பீட்டர் வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ள முன்னாள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் மற்றும் முகமூடி அணிந்த நபர்கள் குறித்து அப் பகுதியால் சென்ற ஒருவர் 911 அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியதை அடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
கட்டடத்திற்குள் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதுடன், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மிசிசாகா நபர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளியிடுவதற்கான தடை உத்தரவின் (publication ban) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன.
கோர்பர்ன் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் மீது கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைதல், வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்தல், சட்டவிரோத ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம், இவர்களுக்கான வழக்கு விசாரணை தேதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் வகையில் நீதிமன்றப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, பால்டேஜ் சாந்துவுக்கு கடுமையான வீட்டுக்காவல் நிபந்தனைகளின் கீழ் 250,000 டாலர் பிணை வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து பெயின்ஸ் மற்றும் மான் ஆகியோரும் சிறையிலிருந்து விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிணை மறுஆய்வு கோரியிருந்தனர்.
நான்காவது சந்தேகநபரான டுவைன் பென்னண்ட் ஆரம்பத்தில் 125,000 டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், கடந்த மே மாத இறுதியில் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் தனது பிணை நிபந்தனைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கோர்பர்னுடன் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். கோர்பர்ன் அடுத்த வாரம் காணொளி (video) மூலம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
பென்னண்ட் வரும் வியாழக்கிழமை பிராம்ப்டனில் உள்ள மெய்நிகர் (virtual) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். ஏனைய சந்தேகநபர்கள் இரண்டு வாரங்களில் முன்னிலைப்படுத்தப்படுவர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.