சித்திரவதைகள் மற்றும் ஏனைய cruel (கொடுமையான) நடத்தைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை, ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான உபகுழு (SPT – Subcommittee on Prevention of Torture) கடந்த 2026 ஜூன் 24 அன்று நிறைவு செய்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஐநா உபகுழு, கடந்த ஜூன் 15 முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. சித்திரவதைகளுக்கு எதிரான சாசனத்தின் விருப்பத்திற்குரிய நெறிமுறையின் (OPCAT) கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தினர்.
இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை உபகுழுவினர் சந்தித்தனர். ஜூன் 15 அன்று நடைபெற்ற இச்சந்திப்பில், சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுள்ள ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ (Zero-tolerance policy) கொள்கையை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச உடன்படிக்கை அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போது, முக்கிய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளையும் இந்த ஐநா தூதுக்குழு சந்தித்தது. இக்கலந்துரையாடல்களை வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி, தேசிய ஒருமைப்பாடு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டாகத் தலைமை தாங்கி நடத்தினர்.
இலங்கை நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர். மேலும், சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை மற்றும் புனர்வாழ்வு பணியகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இச்சந்திப்புகளின் போது, சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அல்லது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டமியற்றல், நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கத் தரப்பினர் விளக்கமளித்தனர்.
இதேவேளை, OPCAT இன் கீழ் ‘தேசிய தடுப்பு பொறிமுறையாக’ (National Preventive Mechanism) செயற்படும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் ஐநா குழுவினர் கலந்துரையாடினர்.
அரசாங்கத் தரப்பினருடனான இறுதி விளக்கமளிப்பு அமர்வு ஜூன் 23 அன்று நடைபெற்றது. இதன்போது ஐநா உபகுழு தனது ஆரம்ப அவதானிப்புகளைச் சமர்ப்பித்தது. சித்திரவதைகள் மற்றும் கொடுமையான நடத்தைகளைத் தடுப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்ட தூதுக்குழுவினர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை (சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்கள்) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தமைக்காகவும், விஜயம் முழுவதும் வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் அரசாங்கத்திற்குப் பாராட்டு தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையுடனான ஒத்துழைப்புக் கொள்கை மற்றும் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட உடன்படிக்கை கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கை அரசாங்கம் இந்த உபகுழுவுடன் மிகவும் திறந்த, ஆக்கப்பூர்வமான மற்றும் வெளிப்படையான முறையில் இணைந்து செயற்பட்டதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவைச் சேர்ந்த ஆயிஷா ஷுஜூன் முஹம்மத் தலைமையிலான இந்த ஐநா தூதுக்குழுவில், போலந்தின் ஜாகுப் ஜூலியன் செபெக், குரோஷியாவின் அனிகா டோம்சிக் மற்றும் ஜோர்ஜியாவின் நிகா க்வாரட்ஸ்கெலியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தளமாகக் கொண்டியங்கும் இந்த உபகுழுவின் செயலக அதிகாரிகளும் இவர்களுடன் வருகை தந்திருந்தனர்.
இலங்கை 2017 டிசம்பரில் OPCAT சாசனத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, முதலாவது விஜயம் 2019 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் இந்த உபகுழு இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்