டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten program) பயின்ற சிறுவர்கள், அங்குள்ள ஆரம்பகால விசேட கல்வி ஆசிரியை (ECE) ஒருவரால் தலைமுடியைப் பிடித்து இழுக்கப்பட்டு, கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு, அநாகரிகமான முறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாகாண அரசினால் நிதியளிக்கப்பட்டு, YMCA நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தPilot திட்டத்தில் பயின்ற பல சிறுவர்கள், தங்களது ஆசிரியை தங்களை முழங்கால்களால் நசுக்கியும், மதிய உணவுப் பைகளைக் குப்பையில் வீசியும், கடுமையான சொற்களால் திட்டியும் துன்புறுத்தியதாகத் தங்களது பெற்றோரிடம் அழுதுகொண்டே விவரித்துள்ளனர்.
“நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்” – அழுது உடைந்த 4 வயதுச் சிறுவன்
பாதிக்கப்பட்ட 4 வயதுடைய ஜேம்ஸ் என்ற சிறுவனின் தாயாரான அலிசா ஜெரபெக்கி (Alyssa Zerebecki) இக்கொடூரம் குறித்துப் பேசுகையில்:
“கடந்த பெப்ரவரி மாதம் எனது மகனிடம் பள்ளிக்குச் செல்ல ஆசையாக இருக்கிறதா எனக் கேட்டேன். அவன் திடீரென அழுது உடைந்து, ‘அம்மா, நான் பள்ளிக்குத் திரும்பப் போக மாட்டேன். அந்த ஆசிரியை என் தலைமுடியை இழுக்கிறார், என் பள்ளிப் பையைக் குப்பையில் வீசுகிறார், மற்ற பிள்ளைகள் என்னை அடிப்பதற்காக என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறார்’ என்று கூறினான். இதைக் கேட்டு நான் அதிர்ந்துபோனேன்,” எனத் தெரிவித்தார்.
மற்றொரு சிறுவனான கோல்டனின் தாயார் வனெசா கார்னிக் (Vanessa Cornick) குறிப்பிடுகையில், தனது மகன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து கடுமையான பயத்துடனும், கோபத்துடனும் காணப்பட்டதாகக் கூறினார். சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துத் தெரிவித்ததை அடுத்து, பெற்றோர்கள் இது குறித்து பொலிஸாருக்கும், YMCA நிர்வாகத்திற்கும் அவசரப் புகார்களை அனுப்பியுள்ளனர்.
தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்: குற்றச்சாட்டுகள் இல்லை என ஆசிரியை தரப்பு வாதம்
இச்சம்பவம் தொடர்பாக ராயல் நியூஃபவுண்ட்லாந்து பொலிஸார் (RNC) கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார், தீவிர சோதனைகளின் பின்னர் கடந்த மார்ச் 24, 2026 அன்று இந்த விசாரணைக் கோப்பை, போதிய குற்றவியல் ஆதாரங்கள் இன்மையால் ‘குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி’ (Closed without charges) நிறைவு செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை முகநூல் (Facebook Messenger) வழியே விடுத்த செய்தியில், தன் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, தான் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் இப்பணியில் தொடரவில்லை என்றும், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விபரங்களை மறைக்கும் நிர்வாகம்: பெற்றோர்கள் கடும் ஆக்ரோஷம்!
இந்த விவகாரத்தில் உத்தியோகபூர்வமாகத் தவறு நடந்துள்ளதை மாகாண கல்வி அமைச்சு (Department of Education) உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த முன்பள்ளியானது, சிறுவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நடத்தை வழிகாட்டுதல் கொள்கைகளை (Behaviour Guidance policies) மீறியுள்ளதாகக் கல்வி அமைச்சு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அந்தப் பள்ளியில் என்ன நடந்தது, எந்த ஊழியர் மீது விசாரணை நடத்தப்பட்டது போன்ற அத்தியாவசிய விபரங்களை ‘தனிமனித ரகசியக் காப்புரிமை’ (Privacy and confidentiality) என்ற காரணத்தைக் காட்டி, YMCA நிர்வாகமும் கல்வி அமைச்சும் பெற்றோர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பகிரங்கப்படுத்த மறுத்து வருகின்றன.
“எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் முழு உரிமை பெற்றோருக்கு உண்டு. இவ்வாறான முக்கிய விபரங்களை மறைப்பது, அரசாங்கத்தின் திட்டங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றாகச் சிதைத்துவிடும்,” எனப் பெற்றோர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் பால் டின் (Paul Dinn) இது குறித்துப் பேசுகையில், ஒரு பெற்றோராகத் தானும் இதன் பின்னணியை அறிய விரும்புவதாகவும், மேலதிக விபரங்களுக்குப் பொலிஸாரை அணுகுமாறும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தற்போதும் உளவியல் ரீதியான அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருவதாகப் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளன