சனிக்கிழமை இரவு ஒட்டாவாவில் பெண் ஒருவரின் ஹிஜாபை (Hijab) ஆடவர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கழற்றிய சம்பவம் தொடர்பாக, இன வெறுப்புணர்ச்சியால் தூண்டப்பட்ட குற்றமாக (hate-motivated incident) ஒட்டாவா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேஷோர் வணிக வளாகத்திற்கு (Bayshore Shopping Centre) அருகில் உள்ள வுட்ரிட்ஜ் கிரசண்ட் (Woodridge Crescent) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினரின் தகவல்படி, சந்தேக நபர் எவ்வித தூண்டுதலும் இன்றி அந்தப் பெண்ணை நெருங்கி, இனவெறி வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். பின்னர், அந்தப் பெண் அணிந்திருந்த ஹிஜாபை வலுக்கட்டாயமாக இழுத்துக் கழற்றியதுடன், அவர் மீது குடை ஒன்றையும் எறிந்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த நபரைக் குறித்து முன்னரே தெரிந்திருக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண்ணுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தப்பியோடிய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ஒட்டாவா காவல்துறையின் ‘வெறுப்புணர்ச்சிக் குற்றத் தடுப்புப் பிரிவு’ (Hate Crime Unit) தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள், ஒட்டாவா போலீஸ் அறிக்கையிடல் பிரிவை 613-236-1222 (ext. 7300) என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு, 26-170255 என்ற வழக்குக் குறிப்பு எண்ணைக் கூறி விபரங்களை வழங்க முடியும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.