பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படும் என்று அதிபர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆடைத் உற்பத்தித் துறை (Apparel sector) எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளைக் காண்பதற்கென நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இன்று பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கையின் ஆடைத் கைத்தொழில் துறையைச் சேர்ந்த முன்னணி வணிகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று இதன்போது அதிபர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலக் கொள்கைத் திட்டங்களையும் அவர் சுருக்கமாக விவரித்தார்.
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் வகையில், கிராமப்புறங்களுக்கும் தங்களது கைத்தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு முதலீட்டாளர்களுக்கு அதிபர் அநுர குமார திஸாநாயக்க இதன்போது அழைப்பு விடுத்தார்.
முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டடங்களை அரசாங்கமே எளிதாக்கி வழங்கும் “பிளக் அண்ட் பிளே” (Plug and Play) வழிமுறை குறித்தும் இச்சந்திப்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இவற்றுடன், தற்போதைய வாட் (VAT) வரி முறைமை காரணமாக உள்ளூர் மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கான சாத்தியமான நிவாரண நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு வணிகத் துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமாக ஈட்டப்படும் பணம் நாட்டிற்கு வெளியெ செல்வதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிபர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கும் அதேநேரம், பொதுமக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதைப் பேணும் வகையிலான புதியதொரு சட்டம், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.