நோர்த் யார்க் (North York) பகுதியில் நபர் ஒருவர் மீது வாகனம் மோதிய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணியளவில் கீல் வீதி (Keele Street) மற்றும் வில்சன் அவென்யூ (Wilson Avenue) பகுதிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் ஒரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது, டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய எரிக் சபார் (Erik Safar) என்பவர் தாக்கப்பட்டு, அவர் மீது வாகனம் மோதியதாகப் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹமில்டனைச் சேர்ந்த 18 வயதுடைய மிலன் ஆண்ட்ராஸ் பாபோஸ் (Milan Andras Babos) மற்றும் டொராண்டோவைச் சேர்ந்த 23 வயதுடைய ரிச்சர்ட் ஓலா (Richard Olah) ஆகியோர் பொலிஸாரிடம் சரணடைந்ததுடன், அவர்கள் இருவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
இருப்பினும், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய டொராண்டோவைச் சேர்ந்த 25 வயதுடைய ஜெனிபர் ஓலா (Dzsenifer Olah) என்ற பெண்ணையும் தலாங்கள் தேடி வருவதாகக் கடந்த வாரம் பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தனர்.
திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட புதிய தகவலின்படி, ஜெனிபர் ஓலா கடந்த வார இறுதியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“இந்த விசாரணைக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குப் புலனாய்வாளர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்” எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.