அருட்தந்தை சிறில் காமினி மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாக போதி தம்ம மானவ வின்சா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதம்ம தேரர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளேன். அதனுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான விடயங்கள், திலீப பீரிஸ் தொடர்பான தகவல்கள், இலங்கை பொலிஸ் உள்ளிட்ட சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய இறுவட்டொன்றையும் சமர்ப்பித்துள்ளேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் சில தரப்பினர் இந்த விடயத்தை பயன்படுத்தி சமூகத்தில் பதற்றத்தையும் மத அடிப்படையிலான பிளவுகளையும் உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோர் மேற்கொள்ளும் சில செயற்பாடுகள் சமூகத்தில் வெறுப்புணர்வையும் மத முரண்பாடுகளையும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன். அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அது சட்டத்தின் வரம்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
கர்தினால் ஆண்டகைக்கும் அருட்தந்தை சிறில் காமினிக்கும் நான் தெளிவாக கூறுகின்றேன். இந்த நாட்டில் மத மோதல்களையும் வெறுப்பையும் உருவாக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. குறிப்பாக சிறில் காமினி இந்த நாட்டில் வெறுப்புணர்வை தூண்டும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.
இலங்கை பொலிஸார் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தரப்பாக இல்லாமல், மனித உரிமை அமைப்புகளுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றபோது எங்களை கைது செய்வதாகவும் சிறையில் அடைப்பதாகவும் பொலிஸார் அச்சுறுத்தினர். இது மிகவும் கவலைக்குரிய நிலைமை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயங்களில் மௌனமாக இருக்கின்றது. மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் செயற்படாத நிலையில் சாதாரண மக்களின் உரிமைகளை யார் பாதுகாப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
அதேபோன்று திலீப பீரிஸ் தொடர்பான விடயங்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் எமது முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்படுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமை பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பிலும் தனியான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு அல்லது ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்கள் யாழ்ப்பாணம் மட்டுமன்றி முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் ஒரு முதல் இரண்டு மாதங்கள் வரை தங்கி ஆய்வு செய்ய வேண்டும்