பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டானாவோ தீவில் இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் (6.5 அடி) வரை மேலே உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றாடல் துறை இன்று (14) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விசித்திரமான புவியியல் மாற்றத்தினால் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் வான்வெளிக்கு வெளிப்பட்டு, பெருமளவிலான கடல் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மிண்டானாவோ தீவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 61 பேர் பலியாகியுள்ளனர் என்பதுடன், மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ முகவரகம் புதுப்பிக்கப்பட்ட தரவுகளை வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களின் பின்னரே, கடலோரப் பகுதிகள் திடீரென மேலெழும்பி நிலமாக மாறியுள்ள புவியியல் விந்தையை உள்ளூர் மக்கள் அவதானித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். சில பகுதிகளில் கடலோரக் கரைக்கோடு சுமார் 200 மீற்றர் வரை கடலுக்குள் விரிவடைந்துள்ளது.
“தெற்கு மிண்டானாவோ கடற்கரையிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ‘கொட்டபாட்டோ அகழி’ பகுதியில் ஏற்பட்ட நிலத்தட்டு நகர்வு காரணமாக, சரங்கனி மற்றும் டவாவோ ஆக்ஸிடென்டல் ஆகிய மாகாணங்களின் கடற்கரைப் பகுதிகள் மேல்நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. வரைபடமாக்கப்பட்ட ஆய்வுகளின்படி, இப்பகுதிகள் சுமார் 2 மீற்றர் வரை உயர்ந்து, அதுவரை நீருக்கடியில் மூழ்கியிருந்த கடலின் அடிப்பகுதியை வெளியே காட்டியுள்ளது.”
சுற்றாடல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், கடலுக்குள் இருக்க வேண்டிய பிரம்மாண்ட பவளப்பாறைகள் மற்றும் கடல்புல் படுக்கைகள் முற்றிலும் வறண்டு போய், தரைமட்டத்தில் காட்சியளிக்கின்றன.
பவளப்பாறைகள் காற்றில் வெளிப்பட்டதால், அவற்றுடன் இணைந்து வாழும் சிறிய பாறை மீன்கள், கடல் விலாங்கு மீன்கள், சிப்பிகள் மற்றும் நத்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் மடிந்து வருகின்றன.
அழுகிப்போன கடல் உயிரினங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் மற்றும் துர்நாற்றம் காரணமாக, தங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் வாழ்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கடல் பகுதி மிகவும் பரந்தது என்பதால், சுற்றாடல் துறையின் விசேட குழுவினர் தற்போது ட்ரோன்கள் மற்றும் செய்மதி தொழில்நுட்பங்கள் மூலம் சேத விபரங்களை முழுமையாகக் கணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதமும் இதே கொட்டபாட்டோ அகழிப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.