இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த கலாநிதி தேவநேசன் நேசையா அவரது 91 ஆவது வயதில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.
பேராசிரியர் குணசேகரம் நேசையாவின் புதல்வரான தேவநேசன் நேசையா, கொழும்பு பல்கலைகழகத்தில் கணிதத்துறையில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த அவர், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.
1959 ஆம் ஆண்டு அக்காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த சிலோன் சிவில் சேவையில் இணைந்துகொண்ட அவர், அச்சேவை முடிவுறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சேவையில் இணைந்து பணியாற்றிய இறுதித் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நாட்டில் யுத்தம் இடம்பெற்ற 1981 – 1984 வரையான மிகக்கடினமான காலப்பகுதியில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும், மாவட்டச் செயலாளராகவும் கடமையாற்றினார்.
அதுமாத்திரமன்றி வேறுபட்ட காலப்பகுதிகளில் போக்குவரத்து, சுற்றுச்சூழல், மகளிர் விவகார அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், யாழ் பல்கலைக்கழகப் பேரவை உள்ளிட்ட கட்டமைப்புக்களுடன் இணைந்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.
குறிப்பாக 1996 – 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட ‘யாழ் பிராந்தியத்தில் காணாமல்போனோர் பற்றிய விசாரணைக்குழு’ வின் தலைவராகவும் தேவநேசன் நேசையா செயற்பட்டார்.
அவரது தலைமையிலான குழுவினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை, இன்றளவிலும் இவ்விவகாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மிகமுக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. அதேபோன்று தேவநேசன் நேசையாவின் அளப்பரிய சேவையைப் பாராட்டி 2017 ஆம் ஆண்டு அவருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் “தேசமான்ய” விருது வழங்கப்பட்டது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியலமைப்பு
நெருக்கடியை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட “தேசமான்ய” விருதை ஜனாதிபதி செயலகத்துக்கு நேரில் சென்று மீளக்கையளித்து, தனது கொள்கை உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார்.
இத்தகைய நேர்மையையும், கொள்கை உறுதிப்பாட்டையும் கொண்ட ஆளுமையான தேவநேசன் நேசையா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12) கொழும்பில் காலமானார்.
அன்னாரின் பூதவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 8.30 மணி முதல் ஏ.எஃப்.ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், தகனக்கிரியைகள் இவ்வார நடுப்பகுதியில் பொரளை பொதுமயானத்தில் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.