ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் மெப்லடன் (Mapleton) நகரின் கொனெஸ்டோகோ ஏரிக்கு அருகே உள்ள வீதிச்சந்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 10 பேருடன் பயணித்த வேன் ஒன்றும், எஸ்.யு.வி (SUV) ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் அனைவரும் எல்மிரா (Elmira) பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், பாட்டி படுகாயம்
வேனில் பயணித்த சிறுவர்களின் தாய் ஆபத்தான நிலையிலும், தந்தை சீரான நிலையிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களின் பாட்டி, 15 மாதக் குழந்தை மற்றும் மற்றொரு பெரியவர் ஆகியோரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைச் செலுத்திய ஓட்டுநரின் இரு கால்களும் உடைந்த நிலையில் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
“இது கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவு” என ஒண்டாரியோ மாகாண பொலிஸ் உயர் அதிகாரி டுவைட் திப் (Dwight Thib) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) விடுத்துள்ள சமூக ஊடகப் பதிவில், “இந்த நெஞ்சை உலுக்கும் இழப்பால் ஒட்டுமொத்த மாகாணமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. துயருறும் குடும்பத்தினருக்கு நமது ஆதரவை வழங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.