ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொது மருத்துவ பயிற்சியாளரான (General Practitioner) வினோ காரியகரவன (49) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த இவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் இரண்டு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய ஒரு சட்டவிரோத மற்றும் அநாகரிகமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் பெர்த் நீதிபதி நீதிமன்றம் (Perth Magistrates Court) இவரை செவ்வாய்க்கிழமை குற்றவாளி என அறிவித்தது.
பின்னணி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம், முதுகுவலியால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய சர்வதேச மாணவி ஒருவர், கார்லைல் மருத்துவ மையத்திற்கு (Carlisle Medical Centre) சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு தசைப்பிடிப்பு இருப்பதாகக் கூறி மறுநாள் அக்குபஞ்சர் சிகிச்சைக்காக மருத்துவர் காரியகரவன வரவழைத்துள்ளார்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சிகிச்சையின் போது, அந்தப் பெண்ணிடம் மருத்துவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதோடு, அவரது பாலியல் வாழ்க்கை குறித்த கேள்விகளைக் கேட்டு அநாகரிகமாகத் தொட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போலியான கருத்துப் படிவம்:
சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் காரியகரவன ஒரு போலியான கருத்துப் படிவத்தை (Feedback Form) கணினியில் தயாரித்து அச்சிட்டுள்ளார். அதில், “இந்தச் சிகிச்சை முறை மிகவும் தொழில்முறையாக (Professional) செய்யப்பட்டது, இச்சிகிச்சையில் நான் திருப்தி அடைகிறேன்” என்று எழுதி, அந்தப் பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
மருத்துவரின் தரப்பு வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது ஒரு தற்செயலான தொடுதல் என்று வாதிட்டார்.
எனினும், இதனை நிராகரித்த நீதிபதி பெலிண்டா கோல்மேன் (Magistrate Belinda Coleman), மருத்துவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண் இதற்குச் சம்மதிக்கவில்லை என்பதும், சிகிச்சையின் போது அவரது பாலியல் வரலாறு குறித்துக் கேட்பதற்கு எந்தவொரு மருத்துவக் காரணமும் இல்லை என்பதும், தனது குற்றத்தை மூடிமறைக்கவே மருத்துவர் அந்தப் போலியான படிவத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் என்பதும் நீதிபதியால் உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்திரேலிய சுகாதாரப் பயிற்சியாளர் ஒழுங்குமுறை முகமையின் (AHPRA) பதிவின்படி, இவர் இன்னும் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவே நீடிக்கிறார். இருப்பினும், அவரது இணையப் பக்கத்தில் அவர் தற்சமயம் “ஆண் நோயாளிகளை மட்டுமே” பரிசோதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.