கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இவ்விபத்துச் சம்பவம் குருநாகல், பன்னலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினருடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தடம் புரண்டுள்ளது.
அவ்வாறு தடம் புரண்ட கார், மிக அதிவேகமாக வீதியின் அருகில் இருந்த மதிலொன்றின் மீது மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த 12 வயதுடைய சிறுவன், பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, காரைச் செலுத்திச் சென்ற சிறுவனின் தந்தையும், அருகில் அமர்ந்திருந்த தாயாரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காரின் அதிக வேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமா என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.