கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு விதிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் மேலதிக அபராதத் தொகையை அறவிடுவது தொடர்பாக எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு நிலையான மூவரடங்கிய நீதிமன்ற குழாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நேற்று புதன்கிழமை(13) உத்தரவிட்டது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்காக 54 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் அடையாளம் காணப்பட்டு, குசுமதாச மஹாநாம தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவருக்கு 20 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குறித்த வழக்கில் பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் அபராத தொகையைச் செலுத்துவதற்குத் தன்னிடம் எவ்வித சொத்துக்களும் இல்லை என பிரதிவாதி சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வினவலுக்கு பதிலளித்த நீதிமன்றம், ஆரம்பத் தீர்ப்பை அறிவிக்கும்போது, குறித்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அதற்குப் பதிலாக அனுபவிக்க வேண்டிய மேலதிக சிறைத்தண்டனை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியது.
அவ்வாறானதொரு விடயம் ஆரம்பத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத நிலையில், அபராதத்தைச் செலுத்தத் தவறியமைக்காக இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக சிறைத்தண்டனையை விதிப்பதுக்கு தமது நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என நீதியரசர் பிரியந்த லியனகே தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.