ஆர்.பி.கோ (RPC) பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை (06) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட உதவி முகாமையாளரால் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொக்கா தோட்டத்தின் ‘எடம்ஸ்பீக்’ பிரிவில் பங்களா காவலாளியாக பணிபுரியும் பி. சிவகுமார் (வயது 49) என்பவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு வழமையான பணிக்கு சென்றபோது தோட்ட உதவி முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்குள்ளான தொழிலாளி, நள்ளிரவு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தற்போது மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார கருத்துத் தெரிவிக்கையில்; “முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான தோட்ட உதவி முகாமையாளர் நிக்ஷன் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (07) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்,” எனத் தெரிவித்தார்.