நெல்லியடி பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவானால் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
சித்திரை புதுவருட பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்பப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சுகாதார சீர்கேடுகள் கண்டறியப்பட்டன.
இதன்போது, முகச்சவரம் செய்யாமை, முகக்கவசம், மேலங்கி, கையுறை என்பவற்றை அணியாது உணவினை கையாண்டமை, அழுக்கு படிந்த தரையில் உணவுகளை வைத்திருந்தமை ஆகிய சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் முகாமையாளருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
இதே போன்ற சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகத்தின் முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
அத்துடன் எலி எச்சங்கள் மற்றும் அழுக்கான இடங்களில் உணவுப் பொருட்களை வைத்திருந்தமை உறுதிசெய்யப்பட்ட பலசரக்கு கடை முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
இதேவேளை சுகாதார விதிமீறல்களுடன் இயங்கிய மேலும் ஒரு பலசரக்கு கடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த கடை முகாமையாளர் மன்றில் சமூகமளிக்காததை அடுத்து குறித்த வழக்கினை வரும் ஜூன் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.