மதுரை,
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம், தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே திருப்புவனம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை முன்னாள் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. தனது கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அஜித்குமார் மரணத்தில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், எனவே இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வாளர் ரமேஷ்குமாரின் கோரிக்கை குறித்து சி.பி.ஐ. விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தார். அஜித்குமார் மீது சுமத்தப்பட்ட நகை திருட்டுப் புகார் பொய்யானது என ஏற்கனவே சி.பி.ஐ. நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ள நிலையில், உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த மனுவின் விசாரணை அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
#AjithkumarMurderCase #CBIInvestigation #MaduraiHighCourt #PoliceCustodyDeath #InspectorRameshKumar #SivagangaNews #JusticeForAjithkumar #MadapuramTemple #LegalUpdate #CBICourt #TamilNaduPolice #HighCourtOrder #CustodialTorture #BreakingNews #MaduraiBench #HumanRights #TamilPolitics #CBIReport #JusticeDelay #PoliceNews