மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை, 68 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி, வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில், சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த குறித்த நபர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் – நாவற்குடா பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற மரணவீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதில், மண்வெட்டி பிடியால் தாக்கப்பட்ட 35 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த 17ஆம் திகதி சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள சித்தாண்டி பகுதியில், பணம் தர மறுத்த தாயை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சிவபுரம் பகுதியில் குடும்பத் தகராறினால் தந்தையை தாக்கிய சம்பவத்தில், படுகாயமடைந்த 58 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்காக 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனுடன், மகாஓயா – சூரியடி பகுதியில் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடங்களுக்கு பொலிஸ் தடயவியல் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி கொலைச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர் மற்றும் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.