உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், நீண்டகால வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறனை உறுதிப்படுத்தத் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியம் என்று குறிப்பிட்டார்.
இலங்கை எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதால், ஏனைய பிராந்திய நாடுகளைப் போலவே வெளிப்புற அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மீண்டும் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.
இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை தனது நிதிச் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தியுள்ளதால், பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்போது நாடு வலுவான நிலையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரசாங்கத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது, இது நிதிப் பாதுகாப்பை (Fiscal buffers) மீண்டும் கட்டியெழுப்ப உதவியுள்ளது.
இந்த முன்னேற்றமானது, எரிசக்தி விலை உயர்வால பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கத்திற்கு வழிவகை செய்யும். எவ்வாறாயினும், வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு இத்தகைய ஆதரவு நடவடிக்கைகள் “இலக்கு வைக்கப்பட்டதாகவும் தற்காலிகமானதாகவும்” (Targeted and temporary) இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.