ஒரு கடுமையான விபத்திற்குப் பிறகு, தனது கார் காப்பீட்டு (Insurance) நிறுவனத்தின் சிக்கலான நடைமுறைகளால் எட்டு மாதங்களாக வாகனம் இல்லாமல் தவித்த ஒன்டாரியோ ஓட்டுநர் ஒருவர், அந்த நிறுவனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இது ஒரு நேரடியான கோரிக்கையாக (Claim) இருந்திருக்க வேண்டும்,” என்று மேப்பிள், ஒன்டாரியோவைச் சேர்ந்த 65 வயது அப்துல் மஜீத் சிடிவி நியூஸ் (CTV News) ஊடகத்திடம் தெரிவித்தார்.
செப்டம்பர் 2, 2025 அன்று வானில் (Vaughan) மஜீத் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, போக்குவரத்திற்காக அவர் வேகத்தைக் குறைத்த சமயம் பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதியது. “தாக்கம் மிக மோசமாக இருந்தது. எனது கார் சுழன்று, நடைபாதையில் ஏறி சாலையோரம் விழுந்து முற்றிலும் சிதைந்தது… உயிர் தப்பியதற்கு இறைவனுக்கு நன்றி,” என்று அவர் கூறினார். இந்த விபத்தில் அவருக்கு கழுத்து மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது.
மஜீத் தனது 2018 லெக்ஸஸ் (Lexus ES300h) கார் விபத்துக்குள்ளானதை அடுத்த நாளே சிஏஏ இன்சூரன்ஸ் (CAA Insurance) நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மஜீத் தனது காப்பீட்டு அதிகாரிக்கு (Adjuster) பல மின்னஞ்சல்களை அனுப்பினார். ஆனால் பல மாதங்களாக அந்த மின்னஞ்சல்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. நிறுவனத்தின் வழிகாட்டுதல் இல்லாததால், காரை மீட்டு பாதுகாப்பாக வைக்க (Towing and storage) தனது சொந்தப் பணத்திலிருந்து $9,940.61-ஐ அவர் செலுத்த வேண்டியிருந்தது.
நவம்பர் 6 அன்று, அவர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோதுதான், அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரி வேலையை விட்டு நின்றுவிட்டது தெரியவந்தது. “அங்கு வேலையில் இல்லாத ஒருவரைத் தொடர்பு கொள்ள நான் இவ்வளவு காலம் முயன்றிருக்கிறேன்… ஆனால் சிஏஏ இது குறித்து எனக்கு எதுவும் சொல்லவில்லை,” என்றார் அவர்.
ஒரு மாதம் கழித்து, கார் இழப்பீடாக $21,075.90 தருவதாகவும், பாதுகாப்புச் செலவில் (Storage fees) 50 சதவீதத்தை மட்டுமே ஏற்பதாகவும் நிறுவனம் கூறியது. இது அவர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவு.
மஜீத் ஒரு சுயாதீன மதிப்பீட்டாளரை அணுகியபோது, காரின் மதிப்பு $26,851.00 எனத் தெரியவந்தது. இதை அவர் நிறுவனத்திடம் முறையிட்டபோது, கார் மீது கடன் (Lien) இருப்பதாகக் கூறி நிறுவனம் விசாரணையைத் தொடங்கியது. ஆனால், அந்த கார் அவரது குடும்பத்திற்குப் பரிசாக வழங்கப்பட்டது என்றும், அதன் மீது கடன் இல்லை என்பதையும் ஆவணங்கள் நிரூபித்தன.
அதன்பிறகு, மற்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டு விபத்தின் வேகம் குறித்த தடயவியல் விசாரணைக்கு (Forensic investigation) அவர் உட்படுத்தப்பட்டார். “இது மிகப்பெரிய துரோகமாகத் தெரிந்தது. நான் எதையும் மறைக்கவில்லை என்பதால் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். ஆனால் இந்த இழுபறியால் நான் மருத்துவ சிகிச்சைகளுக்குக் கூட செல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானேன்,” என்று மஜீத் வேதனையுடன் தெரிவித்தார்.
சிடிவி நியூஸ் தலையிட்ட பிறகு, சிஏஏ இன்சூரன்ஸ் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதாக அறிவித்தது. காப்பீடு செய்தவர் சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர வேண்டியது அவசியம் என்று நிறுவனம் குறிப்பிட்டது. எனினும், மஜீத் அனைத்து ஆவணங்களையும் முன்பே சமர்ப்பித்துவிட்டதாகக் கூறுகிறார்.
இறுதியில், கார் மதிப்பீட்டுத் தொகை மற்றும் முழுமையான பாதுகாப்புச் செலவை வழங்க சிஏஏ ஒப்புக்கொண்டது. “சிடிவி நியூஸைத் தொடர்பு கொண்ட பிறகுதான் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. ஒப்பந்தப்படி அவர்கள் இப்போது நடந்துகொண்டாலும், இது குறித்து ஒழுங்குமுறை ஆய்வு (Regulatory review) தேவை என நான் நினைக்கிறேன்,” என்று மஜீத் கூறினார். காலதாமதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கனடா இன்சூரன்ஸ் பீரோவின் (IBC) இயக்குநர் ஆன் மேரி தாமஸ் கூறுகையில், பொதுவாக ஒரு காப்பீட்டுக் கோரிக்கை இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்றார். எட்டு மாதங்கள் என்பது மிகவும் அரிதானது என்றும், நிறுவனத்திடம் பதில் இல்லை என்றால் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் (Ombudsperson) முறையிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.