ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டுள்ள மிக முக்கியமான கார்க் தீவு (Kharg Island) மீது இன்று (ஏப்ரல் 07) அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கார்க் தீவில் பலமுறை பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ ‘மெஹ்ர்’ (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய பவளத் தீவு, ஈரானின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. இங்கிருந்துதான் ஈரானின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் சர்வதேச சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
இதேவேளை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இன்று ஈரான் முழுவதும் “பயங்கரவாத ஆட்சியின் உள்கட்டமைப்புகள்” எனக் கருதப்படும் இடங்கள் மீது விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது:
கோம் நகருக்கு அருகிலுள்ள ஒரு பிரதான பாலம் அமெரிக்க-இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
கஷான் நகருக்கு அருகிலுள்ள ‘யஹ்யாபாத்’ ரயில்வே பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானியப் புரட்சிகர இராணுவம் (IRGC), அமெரிக்கா தனது “சிவப்பு கோட்டை” மீறினால், அதற்குரிய பதிலடி இந்தப் பிராந்தியத்தையும் தாண்டி மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
கார்க் தீவு மீதான தாக்குதல் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.