தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தபடி தமிழ் அரசியல் கைதிகள் பத்துபேரையும் ஜனாதிபதி உடனடியாக நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்யவேண்டும் என 300க்கும் மேற்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்களும் தனிநபர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் ஒன்றாகும். அவசரகாலச் சட்டம் மற்றும்/அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு, காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
1970கள் மற்றும் 80களில் இடம்பெற்ற ஜே.வி.பி (JVP) கிளர்ச்சிகள் முதல், 30 ஆண்டுகால இன மோதல், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் அநியாயமாக இலக்கு வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது வரை, மற்றும் மிகச் சமீபத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் (அரகலய) வரை – மாற்றுக் கருத்துக்களையும் அரசியல் எதிரிகளையும் நசுக்குவதற்கு அரசாங்கம் ‘பயங்கரவாதச் சட்டங்களையும்’ அவசரகால விதிமுறைகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியிருக்கும் 10 நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளில் (சுருக்கமான வழக்கு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன), ஆகஸ்ட் 2009 இல் கைது செய்யப்பட்ட செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோரின் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அவர்களின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பே சிறைக்குள் கழிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
அவர்கள் தங்களின் முழு இளமைப் பருவத்தையும், முதிர் பருவத்தின் பெரும் பகுதியையும் விசாரணைகளுக்காகக் காத்திருப்பதிலேயே இழந்துள்ளனர். எஞ்சிய எட்டு கைதிகள் தண்டனை பெற்றிருந்தாலும், அவர்களும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களில் இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பதுடன், பொலிஸார், சிறை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் கொடூரமான சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். மேலும், தன்னிச்சையான தாமதங்கள் மற்றும் நடைமுறை குறைபாடுகளாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நல்லிணக்கத்திற்கான ஒரு செயலபாடாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடியும், இவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களினதும் மற்றும் கைதிகளினதும் ஏகோபித்த கோரிக்கையாகும்.
இந்த நடவடிக்கை முன்னுதாரணம் இல்லாதது அல்ல. 1977 ஆம் ஆண்டு நவம்பரில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, குற்றவியல் நீதிக் ஆணைக்குழு (CJC) சட்டத்தின் கீழ் (இது 1971 ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை விசாரிக்கப் பயன்படுத்தப்பட்டது) தண்டனை அனுபவித்து வந்த அனைத்து ஜே.வி.பி உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு அறிவித்தார். அரச ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்த இந்த அரசாங்கம், தமது வாழ்நாளில் பாதியை சிறைக்குள் கழித்த எஞ்சியிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளையும் இதேபோன்ற முறையில் நிபந்தனையின்றி விடுதலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேற்கூறிய உண்மைகளின் அடிப்படையில், ஜனாதிபதியிடம் நாம் பின்வருவனவற்றை கோருகிறோம்:
நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு உண்மையாகவும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட ஏனைய அனைத்து பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகளின் வழக்குகளையும் மீளாய்வு செய்து விரைவுபடுத்துதல், மற்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் அல்லது நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.
சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு நியாயமான மற்றும் விகிதாசார இழப்பீடுகளை வழங்குதல்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்குதல் மற்றும் அதுவரை அச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உடனடி தடையை (Moratorium) விதித்தல்.
முன்மொழியப்பட்டுள்ள அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PSTA) மீளப் பெறுதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக எந்தவொரு புதிய பயங்கரவாதச் சட்டங்களையும் அறிமுகப்படுத்த மாட்டோம் என உறுதியளித்தல்.