ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் (intergovernmental agreements) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த விஜயத்தின் போது இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எரிபொருளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸநலிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையை மதிப்பதாகக் கூறினார். இருப்பினும், சொந்தமாக எண்ணெய் கப்பல்களை (Tankers) கொண்டுள்ள நாடுகளே இந்தச் சூழலில் பயனடைய முடியும் என்றும் இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் விளக்குகையில்:“ரஷ்யாவுடன் அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இதைச் செய்ய முடியுமா என்று முயற்சித்து வருகிறோம். ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் வருகை இப்பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தார்.