இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (Sri Lanka Cricket) தலைவர் உடனடியாக பதவிலக வேண்டும் என வலியுறுத்தி, ஒரு குழுவினர் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கையளித்தனர். இணையவழியில் ஆயிரக்கணக்கானோரின் கையொப்பங்களைப் பெற்றுள்ள இந்த மனு, நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோருகிறது.
கடந்த சில வாரங்களாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேசிய அந்த குழுவினர், இந்த மனு ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கொண்டுள்ள அதிருப்தியை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் அவர்கள் இதன்போது நினைவு கூர்ந்தனர். இன்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனுவை உத்தியோகபூர்வமாக கையளிக்க முடியாமல் போனாலும், இந்த வார இறுதியில் மீண்டும் வருகை தந்து அவரிடம் நேரடியாக ஆவணத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து வளர்ந்து வரும் பொதுமக்களின் அதிருப்தியை இந்த மனு பிரதிபலிப்பதாகவும், தலைமைத்துவத்தில் உடனடி மாற்றங்கள் தேவை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நாட்டின் விளையாட்டின் எதிர்கால நலனுக்காகவும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிக பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காகவுமே தாம் செயற்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த மனு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அளிக்கவில்லை. இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு விசேட குழு அல்லது விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.