வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை நடந்த போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.
வெள்ளை சட்டை அணிந்து கருப்பு நிற முகக்கவசத்துடன் வந்த துப்பாக்கிதாரி, தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்து லசந்த விக்ரமசேகரவை நான்கு முறை சுட்ட பின்னர், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.