இரண்டு முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளின் (First-degree murder charges) கீழ் ஒரு நபர் குற்றவாளியா இல்லையா என்பதை 14 பேர் கொண்ட நடுவர் மன்றம் (Jury) தீர்மானிக்கவுள்ளது.
கடந்த 2025 ஜனவரி மாதத்தில் நியூ பிரன்சுவிக் (N.B.), செயின்ட் ஜான் நகரின் வடக்கு பகுதியில் இரண்டு சிறுவர்களைக் கொன்றதாக, இரண்டு முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபரின் வழக்கு விசாரணைக்கான நடுவர் மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
‘கோர்ட் ஆஃப் கிங்ஸ் பெஞ்ச்’ (Court of King’s Bench) நீதிமன்றத்தின் நீதிபதி டேரல் ஸ்டீபன்சன் (Darrell Stephenson), 46 வயதான ரோமன் காமிஷ்னி (Roman Kamyshnyy) என்பவருக்கு எதிரான இந்த நடுவர் மன்ற விசாரணைக்கு தலைமை தாங்குகிறார்.
ஊடக வெளியீட்டுத் தடை (Publication ban) காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன; அவர்கள் ‘பாதிக்கப்பட்டவர் A.B.’ மற்றும் ‘பாதிக்கப்பட்டவர் C.D.’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
இந்த வெளியீட்டுத் தடையானது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துவதையும் தடுக்கிறது. எனினும், இந்தச் சம்பவத்தை குடும்ப வன்முறை (Domestic violence) சார்ந்த ஒன்றாக விவரிக்க ஊடகங்களுக்கு முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் அனுமதி அளித்துள்ளன.
கடந்த 2025 ஜனவரி 29 அன்று காலை 7 மணியளவில் செயின்ட் ஜான் காவல்துறை அதிகாரிகள் ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றனர். உடனடியாக வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர், அங்கு 17 வயது மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த காமிஷ்னியும் கண்டறியப்பட்டு, செயின்ட் ஜான் பிராந்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் எலைனா காம்ப்பெல் (Elaina Campbell), கிறிஸ் ரையன் (Chris Ryan) மற்றும் ஒர்லாண்டோ லினெரோஸ் (Orlando Lineros) ஆகியோர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாக (Crown prosecutors) செயல்படுகின்றனர். ஷானா விக்ஸ் (Shanna Wicks) சட்ட உதவி மூலம் காமிஷ்னி சார்பாக ஆஜராகியுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற நடுவர் மன்றத் தேர்வு செயல்முறையின் போது காமிஷ்னி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.
மூன்று வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த விசாரணைக்காக 14 நடுவர் மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்வு செயல்முறைக்காக 100க்கும் மேற்பட்ட சாத்தியமான நடுவர் மன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
நடுவர் மன்றத் தேர்வுக்கு முன்னதாக, நீதிபதி ஸ்டீபன்சன் சாத்தியமான நடுவர் மன்ற உறுப்பினர்களிடம், இந்த வழக்கை நடுநிலையான மனதுடன் அணுக வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரசுத் தரப்பின் ஆரம்ப வாதம்
மதிய உணவுக்கான இடைவேளைக்குப் பிறகு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் ஆரம்ப வாதங்களைக் கேட்பதற்காக நடுவர் மன்ற உறுப்பினர்கள் மதியம் 2:30 மணியளவில் நீதிமன்ற அறைக்குத் திரும்பினர்.
அரசுத் தரப்பு சார்பில் கிறிஸ் ரையன் தனது ஆரம்ப அறிக்கையை முன்வைத்தார். அதில் அவர், பாதிக்கப்பட்ட A.B. மற்றும் C.D. ஆகியோரின் பின்னணி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருடன் அவர்களுக்கு இருந்த உறவு குறித்து நடுவர் மன்றத்திற்கு விளக்கினார். மேலும், இந்த கொலைகளுக்குக் வழிவகுத்த சம்பவங்களையும் அவர் விவரித்தார்.
இருப்பினும், நீதிமன்ற வெளியீட்டுத் தடை காரணமாக இந்த விபரங்கள் எதையும் நீதிமன்றத்திற்கு வெளியே பகிர்ந்து கொள்ள முடியாது.
காமிஷ்னி, A.B. மற்றும் C.D. ஆகிய இருவரையும் குத்திக் கொன்றுவிட்டு, பின்னர் ஒரு நெயில் கன் (Nail gun – ஆணி அடிக்கும் கருவி) மூலம் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக ரையன் நடுவர் மன்றத்திடம் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடரவுள்ளதுடன், இது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு நடவடிக்கைகள் ஜூன் 26க்குள் நிறைவடையும் என நம்பப்படுகிறது.