2002ஆம் ஆண்டு தனமல்வில பகுதியில் இடம்பெற்ற ஐவர் கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2002 ஜூன் 6ஆம் திகதி தனமல்வில, கிதுல்கொட்டை பகுதியில் டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 12 போரா ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மொனராகலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது, சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட தனமல்வில, கோந்தெட்டியார பகுதியைச் சேர்ந்த கமகே பந்துல ஹரிச்சந்திர மற்றும் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த ருவன் பிரசன்ன ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.