தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல, மாறாக அது திறைசேரியின் (Treasury) மேற்பார்வை மற்றும் உள்நாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மிக உயர்ந்த மட்டத்திலான அமைப்புகள் தோல்வியடையும் போது, மேற்பார்வை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்காக கீழ்நிலை அதிகாரிகளை “பலி ஆடுகளாக” (Sacrificial lambs) மாற்றக்கூடாது என்று கூறியுள்ளார்.
அனுபவமற்ற அதிகாரிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி உணர்திறன் மிக்க தொழில்நுட்பப் பதவிகளில் அமர்த்தப்பட்டால், அதன் பொறுப்பை அந்த அதிகாரிகளிடம் சுமத்தாமல், அத்தகைய பலவீனமான அமைப்பை வடிவமைத்தவர்களே ஏற்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாமல் ராஜபக்ச தொடர்ச்சியான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்:
மோசடியான மின்னஞ்சல் அறிவுறுத்தல்கள் எவ்வாறு நிறுவப்பட்ட சரிபார்ப்பு முறைகளைத் (Verification protocols) தாண்டிச் சென்றன?
தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் போதுமானதாக இல்லை?
பாரிய அளவிலான பணப் பரிமாற்றங்களை நிர்வகிப்பதில் இலங்கை மத்திய வங்கியின் பங்கு எவ்வாறு குறைத்து மதிப்பிடப்பட்டது?
பொது நிதியை இத்தகைய ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் ஒரு செயல்முறைக்கு அனுமதி வழங்கியது யார்?