கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம் என்றும் புதிய தரவுகள் காட்டுகின்றன. ஏட்ரியன் கோப்ரியல் இதுகுறித்த சமீபத்திய தகவல்களைத் தருகிறார்.
மிசிசாகா, ஒன்டாரியோ — ரொறன்ரோவுக்கு மேற்கே உள்ள பீல் பிராந்தியத்தில் (Peel Region), 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடும்போது, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
“இந்த ஆண்டில் எமது பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன,” என்று 1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பிராந்தியத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிக் மிலினோவிச் (Nick Milinovich) ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர் கூறுகையில், “இந்த அதிகரிப்பிற்கான காரணம் பணம் பறித்தல் (Extortions), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் (Organized crime) மற்றும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்துடன் நேரடியாகத் தொடர்புடையது” என்றார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ஒன்டாரியோவின் மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் ஆகிய நகரங்களில் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பீல் பிராந்தியத்தில் உள்ள இந்த இரண்டு நகரங்களிலும் 58 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களே பதிவாகியிருந்தன.
“தெருக்களிலிருந்து சட்டவிரோதத் துப்பாக்கிகளை அகற்றுவதற்காகவே பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு ஒன்று எம்மிடம் உள்ளது. வார இறுதியொன்றில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடத்தி வரப்பட்ட மூன்று அல்லது நான்கு சட்டவிரோதத் துப்பாக்கிகளை அவர்கள் கைப்பற்றுவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாகும்” என்று மிலினோவிச் கூறுகிறார்.
கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Statistics Canada) தரவுகள், எட்மண்டன் மற்றும் அல்பெர்ட்டா உட்பட நாடு முழுவதும் குற்றங்களின் தீவிரத்தன்மை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.
‘இந்த நாடு என்னவாகிவிட்டது?’
CTV News செய்திச் சேவைக்கு பீல் பிராந்தியப் பொலிஸாரால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, மிசிசாகா மற்றும் பிராம்ப்டனில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் (Home invasions) 2024 ஆம் ஆண்டை விடக் குறைந்திருந்தாலும், அவை இன்னமும் தொடர்ச்சியான பிரச்சினையாகவே இருந்துவருகின்றன.
2024 இன் முதல் ஆறு மாதங்களில், பீல் பிராந்தியத்தில் 50 வீடமைப்புச் சட்டவிரோத ஊடுருவல்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கை 2025 இல் 34 ஆகக் குறைந்து, 2026 இல் இதுவரை 36 ஆகப் பதிவாகியுள்ளது.
“மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, இதை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மேலும் ஆறு மாதங்களுக்கு நாங்கள் சும்மா அனுமதிக்க முடியாது. இந்த வன்முறைக் குற்றங்களைத் தடுக்க நேற்றே நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்கிறார் வீடமைப்பு ஊடுருவல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட சாம் மக்டாடி (Sam McDadi).
ரொறன்ரோ ராப்டர்ஸ் (Toronto Raptors) கூடைப்பந்தாட்ட அணிக்கு உத்தியோகபூர்வ தரகு நிறுவனமாக இயங்கும் பிரபல ரியல் எஸ்டேட் தரகரான மக்டாடி, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டாவாவில் உள்ள சட்டவாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் தனது கசப்பான அனுபவத்தை பகிரங்கமாக வெளியிட ஒப்புக்கொண்டார்.
ஜூலை 2023 இன் அதிகாலை வேளையில், மிசிசாகாவில் உள்ள தனது வீட்டிற்குள் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டுத் தான் தூக்கத்திலிருந்து விழித்ததாக மக்டாடி கூறுகிறார்.
“அப்போது காலை 5:30 மணி இருக்கும், பெரிய சத்தத்துடன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ‘சரி, எனது வீட்டிற்குள் யாரோ திருடப் புகுந்துவிட்டார்கள். அவர்கள் என்னை அச்சுறுத்த வருகிறார்களா அல்லது எனது கார்களைத் திருட வருகிறார்களா?’ என்று எனக்குள் நினைத்தேன்,” என மக்டாடி நினைவு கூர்கிறார்.
கிரிமினல் கும்பல் ஒன்று விரைவாக அவரது வீட்டிற்குள் நுழைந்து, இரண்டு கார் சாவிகளைக் கைப்பற்றி, டிரைவ்வே வேலியை இடித்துத் தள்ளிக்கொண்டு அவரது இரண்டு வாகனங்களுடன் தப்பிச் சென்றது.
பாதுகாப்புக் கேமரா காட்சிகளை பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆய்வு செய்த பிறகே, தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்தேன் என்பதை மக்டாடி உணர்ந்துகொண்டார்.
“வீட்டிற்குள் ஏழு சந்தேக நபர்கள் நுழைந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் துப்பாக்கி இருந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி என்னிடம் கூறினார்,” என்று மக்டாடி தெரிவிக்கிறார்.
பின்னர் 2025 இல், சான்டா கிளாஸ் பேரணியில் (Santa Claus parade) பங்கேற்றுத் திரும்பிய பிறகு, மக்டாடி இரண்டாவது வன்முறைக் குற்றத்திற்கு இலக்கானார்.
“அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விருந்தினர்களுக்கான நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை நோக்கித் திரும்பியபோது, இரண்டு இளைஞர்கள் என்னை நோக்கி வந்து, ‘சாவியைக் கொடுத்துவிட்டு காரை விட்டு வெளியேறு’ என்று மிரட்டினார்கள்,” எனக் கூறும் மக்டாடிக்கு அவர்களின் கோரிக்கைக்குப் பணிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
மிசிசாகாவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து CTV News உடன் பேசிய மக்டாடி, தான் இனி பாதுகாப்பாக உணருவதில்லை என்று கூறுகிறார்.
“இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறை. இந்த நாடு என்னவாகிவிட்டது என்று நான் யோசிக்கிறேன்? நாங்கள் எதிர்பார்க்கும் கனடா இதுவல்ல,” என்கிறார் மக்டாடி.
சமூக ஊடகங்களின் செல்வாக்கு
“வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பெரும் கவலையை உருவாக்கும் குற்றங்களில் ஒன்றாகும்; அதில் நியாயமும் உள்ளது,” என்று மிலினோவிச் கூறுகிறார்.
அதேவேளை கவலைக்குரியதாக இருந்தாலும், சமூக உறுப்பினர்களால் பகிரப்படும் சில பயங்கள் புள்ளிவிவர உண்மைகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் துணை பொலிஸ் அதிபர் கூறுகிறார்.
“1.7 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நகரத்தில் இந்த ஆண்டு இதுவரை 30 க்கும் மேற்பட்ட வீடமைப்பு ஊடுருவல்களே பதிவாகியுள்ளன. இது பகிரப்படும் கவலைகளைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. பீல் பிராந்தியத்திலும் பெரிய ரொறன்ரோ பகுதி முழுவதிலும், பொலிஸார் வீடமைப்பு ஊடுருவல்களைத் தடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்; ஒன்று நடந்தாலும் அது அதிகம் தான்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த மாதம் வெளியிடப்பட்ட கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை, நபர் ஒன்றுக்கான கணக்கீட்டில் வன்முறையற்ற மற்றும் வன்முறைக் குற்றங்கள் இரண்டுமே நாடு முழுவதும் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இருப்பினும், பீல் பிராந்தியம் போன்று சில இடங்களில் சில குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுடன் சேர்த்து, இணையவழி விசாரணைகளை மேற்கொள்ளப் புலனாய்வாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம் C-22 (Bill C-22) மற்றும் தொடர் குற்றவாளிகளை நீண்ட காலம் சிறையில் அடைக்க வாக்குறுதியளிக்கும் சட்டமூலம் C-22 (Bill C-14) உள்ளிட்ட சட்ட மாற்றங்களுக்காகவும் தான் வலியுறுத்தி வருவதாக மிலினோவிச் கூறுகிறார்.
துப்பாக்கிகள் மற்றும் கும்பல்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் படைகள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவாலை ஒப்புக்கொண்ட அதேவேளையில், சமூக ஊடக அல்காரிதம்கள் பொதுமக்கள் மத்தியில் நிலவும் பயத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக பீல் பிராந்தியத்தின் பிரதி பொலிஸ் அதிபர் நம்புகிறார்.
“நமது சமூகத்தைப் பற்றிய தகவல்களை நாம் நுகரும் விதம் மாறியுள்ளது. மக்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் போன்ற தளங்களுக்குச் செல்கிறார்கள், அங்கு ஒரு வன்முறைச் சம்பவத்தின் வீடியோவைப் பார்க்கிறார்கள்; உடனே ஒரு குறிப்பிட்ட சம்பவம் அனைவரது நிஜ யதார்த்தமாகவும் மாறிவிடுகிறது,” என்கிறார் மிலினோவிச்.
‘நிலைமையைச் சரி செய்ய குறுகிய காலமே உள்ளது’
இருப்பினும், குற்றவாளிகளுக்கு வலுவான அச்சத்தை உருவாக்கக்கூடிய வகையில் நீதி அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய பொலிஸ் சேவைகள், அரசாங்கங்கள் மற்றும் சட்டவாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைந்துகொண்டே போவதாக மக்டாடி நம்புகிறார்.
“இல்லையெனில் மக்கள் காலவரையறையின்றி பயத்திலேயே வாழ நேரிடும். ‘நான் உண்மையில் கனடாவில் தொடர்ந்து வாழ விரும்புகிறேனா? நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த அபாயங்களைச் சந்திப்பது பெறுமதியானதா? ஐரோப்பா போன்ற பாதுகாப்பான இடத்திற்கு நாம் மாறிவிடலாமா?’ என்று மக்கள் பேசுவதை நான் கேட்டுள்ளேன்; அதை நாம் விரும்பவில்லை. கனடா ஒரு அழகான நாடு, ஆனால் நிலைமையைச் சரி செய்வதற்கு நம்மிடம் மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது,” என்கிறார் மக்டாடி.
“ஒரு பொலிஸ் சேவையாக, நமது சமூகத்தில் உள்ள மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதும், அவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற அவசியமும், புள்ளிவிவர ரீதியாக அவர்கள் பாதுகாப்பாக இருப்பதைப் போலவே முக்கியமானது” என்கிறார் மிலினோவிச்.
பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் என்ன சொல்வீர்கள் என்று கேட்டபோது, பீல் பொலிஸார் “எங்கள் சமூகத்துடன் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கிறார்கள். பொதுமக்கள் உணர்வதை நாங்களும் உணர்கிறோம், மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று மிலினோவிச் மேலும் கூறினார்.