ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் கப்பல் மீது ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. மற்ற இரண்டு சரக்குக் கப்பல்கள் யாரால் தாக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க முற்றுகையைத் தொடர்வதாகவும், அதே நேரத்தில் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாகவும் ட்ரம்ப் நேற்று இரவு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து தெளிவற்ற சூழலே நிலவுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்குப் புறப்படவில்லை. அதேவேளை, ட்ரம்பின் கருத்துக்களுக்கு ஈரான் இன்னும் உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் ஒருவர், போர்நிறுத்த நீட்டிப்பு என்பது “ஒன்றுமில்லாதது” என்று கூறியுள்ளதுடன், இது ஒரு “திடீர் தாக்குதலுக்கு நேரத்தை வாங்குவதற்கான தந்திரம்” என்றும் விமர்சித்துள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கொள்கலன் கப்பல் (Container ship) ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரச கடற்படையால் வழிநடத்தப்படும் UKMTO வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல்படையின் “துப்பாக்கிப் படகு” (Gun boat) ஒன்று அந்தக் கப்பலை நெருங்கியதாகவும், எவ்வித வானொலி எச்சரிக்கையும் (VHF challenge) விடுக்கப்படாமல், நேரடியாகக் கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் முக்கியமான பகுதியான மாலுமி அறை (Bridge) பலத்த சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.பிபிசி வெரிஃபை (BBC Verify) தகவலின்படி, இன்று காலை ஈரானிய புரட்சிகர காவல்படையால் (IRGC) இலக்கு வைக்கப்பட்ட கொள்கலன் கப்பல் ‘எபமினோண்டாஸ்’ (Epaminondas) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் ஒரு கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். ‘மெரைன் டிராஃபிக்’ (Marine Traffic) வழங்கிய ஏ.ஐ.எஸ் (AIS) தரவுகளின்படி, இந்தக் கப்பல் நீரிணையைக் கடக்கும்போது கண்டறியக்கூடிய சமிக்ஞைகளை (signal) வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) மற்றும் வான்கார்ட் (Vanguard) ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, நீரிணையை கடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கப்பலின் மாலுமியிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ஈரானிய புரட்சிகர காவல்படையின் துப்பாக்கிப் படகு ஒன்று அந்தக் கப்பலை நெருங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கப்பலின் மாலுமி அறைக்கு (bridge) கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் மீது தாக்குதல்: UKMTO தகவல்
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரச கடற்படையால் வழிநடத்தப்படும் UKMTO-வின் தகவலின்படி, வெளிநாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஈரானுக்கு மேற்கே எட்டு கடல் மைல் தொலைவில் வைத்துத் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அக் கப்பல் தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பணியாளர்கள் அனைவரும் “பாதுகாப்பாக உள்ளனர்” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், “ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அதிக அளவிலான நடமாட்டங்கள் இருப்பதை UKMTO அவதானித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைப் புகாரளிக்குமாறு கப்பல்களை ஊக்குவிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் தொலைவில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) “துப்பாக்கிப் படகு” நடத்திய தாக்குதலில் ஒரு கொள்கலன் கப்பலின் மாலுமி அறை பலத்த சேதமடைந்ததைத் தொடர்ந்து இந்த இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிபிசி வெரிஃபை (BBC Verify) தகவலின்படி, இன்று காலை இலக்கு வைக்கப்பட்ட சரக்குக் கப்பல் பனாமா நாட்டுக்கொடியுடன் கூடிய ‘யுபோரியா’ (Euphoria) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தைச் (UAE) சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
‘கிளெப்பர்’ (Kpler) வழங்கிய ஏ.ஐ.எஸ் (AIS) தரவுகளின்படி, இந்தக் கப்பல் ஏப்ரல் 22 அன்று சர்வதேச நேரப்படி அதிகாலை 01:10 மணிக்கு (UTC) நீரிணையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. சவுதி அரேபியாவின் ஜித்தாவே (Jeddah) இதன் இலக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) மற்றும் வான்கார்ட் (Vanguard) ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, ஈரானுக்கு மேற்கே எட்டு கடல் மைல் தொலைவில் சர்வதேச நேரப்படி காலை 06:38 மணிக்கு இக்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து கப்பலின் மாலுமி கப்பலை நிறுத்தியுள்ளார். கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், கப்பலுக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வளைகுடா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான இரண்டாவது கப்பல் இதுவாகும். முன்னதாக, கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஈரானிய புரட்சிகர காவல்படையால் (IRGC) தாக்கப்பட்டதாகப் பதிவாகியிருந்தது.
பிபிசி வெரிஃபை (BBC Verify) தளத்திற்கு கடல்சார் புலனாய்வு நிறுவனமான வான்கார்ட் (Vanguard) வழங்கிய தகவலின்படி, ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்றாவது சரக்குக் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தாக்கப்பட்ட இந்தக் கப்பல் பனாமா நாட்டுக்கொடியுடன் கூடிய ‘எம்.எஸ்.சி பிரான்செஸ்கா’ (MSC Francesca) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் நீரிணையிலிருந்து வெளியேறி தெற்கு நோக்கி ஓமான் வளைகுடாவிற்குள் (Gulf of Oman) சென்று கொண்டிருந்தபோது, ஈரானிய கடற்கரையிலிருந்து சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
வான்கார்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஈரானிய புரட்சிகர காவல்படையினர் (IRGC) எம்.எஸ்.சி பிரான்செஸ்கா கப்பலை அழைத்து, “நங்கூரத்தை இறக்குமாறு” (drop anchor) கட்டளையிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலினால் கப்பலின் வெளிப்பகுதி (Hull) மற்றும் பணியாளர்கள் தங்கும் பகுதி (Accommodation) ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.