அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவாய் தீவை தாக்கியுள்ள “கோனா லோ” எனப்படும் புயலால் கடந்த 10 நாட்களில் சில பகுதிகளில் 127 சென்றி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், ஓஹு (Oahu) மற்றும் மாவி (Maui) தீவுகளில் மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓஹு தீவிலுள்ள பிரதான அணைக்கட்டு ஒன்று உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதனைச் சூழவுள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் சடுதியாக அதிகரித்ததால் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுவரை 230 க்கும் மேற்பட்டோர் அனர்த்த பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
“இந்தச் சூறாவளியைச் சாதாரணமானதாகக் கருத வேண்டாம்” என கவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் எச்சரித்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மண் அதிகளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால், சிறிய மழை பெய்தாலும் அது பாரிய மண்சரிவை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விமான நிலையங்கள் கடும் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள மொத்த சேத மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடக்கும் என ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஹோட்டல்களில் தங்குவதற்கு விசேட விலைக் குறைப்புகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு லஹைனா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அனர்த்தத்தின் வடுக்கள் மறைவதற்கு முன்னரே, இந்த இயற்கைச் சீற்றம் ஹவாய் மக்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.