பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஏதோவொரு நோய் காரணமாக முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் (Blood Pressure) பரிசோதிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபர் திடீரென வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தான் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாக எச்சரித்த வைத்தியர், மீண்டும் அவரது இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க முயன்றுள்ளார். அப்போதும் அந்த நபர் இரண்டாவது முறையாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வைத்தியர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்டவர் மஹகம, சமகிபுர, தென்னஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.