இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் (Forex market) கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சந்தை மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளமையானது நாணய மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கங்களையும் அநிச்சயத்தன்மையையும் தோற்றுவித்து, ஒரு ‘நச்சு வலயத்தை’ (Vicious cycle) உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், லங்கா வங்கியின் (Bank of Ceylon) விற்பனை விலை அண்மையில் 354 ரூபாயை எட்டியுள்ளமையானது, நாணயச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தத்திற்கு சான்றாகும் என்றார்.
இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு கட்டமைப்புச் சார்ந்த (Structural) பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்ட அவர், நிதிச் சந்தைகள் அரசியல் ரீதியான உறுதிமொழிகளை விட, முக்கியமாக நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்று வாதாடினார். “சந்தைகள் நம்பிக்கையின் மேல் இயங்குபவை. சந்தை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்தால், சந்தையே சரிந்துவிடும்” என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு நாணயச் சந்தையும் ரூபாய் சந்தையும் பலவீனமடைந்து வரும் நம்பிக்கையினாலேயே தற்போது பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
நாடு வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்குப் பதிலளித்த ஹர்ஷ டி சில்வா, முதலீட்டாளர்களின் மனநிலையை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வாறான வெற்று அரசியல் உறுதிமொழிகள் போதுமானவை அல்ல எனத் தெரிவித்தார். சந்தைகளுக்கு அரசியல் செய்திகளை விட, தெளிவான மற்றும் வெளிப்படையான சமிக்ஞைகளே தேவைப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
சந்தையின் ‘நச்சு வலயம்’ மற்றும் வர்த்தக முடக்கம்
சந்தையின் தற்போதைய செயல்பாட்டு நடத்தை ஒரு ‘நச்சு வலயம்போல்’ மாறியுள்ளதாக அவர் மேலும் விவரித்தார். அதாவது, ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களின் வெளிநாட்டு நாணய இருப்புகளை (டொலர்களை) சந்தைக்குக் கொண்டு வராமல் நிறுத்தி வைத்துள்ளனர். அதேநேரம், டொலரின் விலை 375 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் இறக்குமதியாளர்கள் அவசரமாக டொலர்களைக் கொள்வனவு செய்ய முற்படுகின்றனர். இந்த நிலைமையானது சந்தையின் திரவத்தன்மை நிலையை (Liquidity conditions) மேலும் மோசமாக்கியுள்ளது.
நாணய வர்த்தக நடவடிக்கைகளில் இதுவரை கண்டிராத வகையிலான மந்தநிலை அல்லது முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இன்று சந்தையில் முறையான மாற்று விகிதம் என்று ஒன்றுமே இல்லை. ஒருவரேனும் டொலரைக் கொள்வனவு செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ முன்வருவதில்லை” எனக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் தற்போது மத்திய வங்கியை மையப்படுத்தியதாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இவ்வாறானதொரு அசாதாரண சூழலில், கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) போன்ற பாரிய திட்டங்களுக்கு அரசாங்கம் எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப் போகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், விலை நிர்ணயம் மற்றும் சந்தைச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும் அபாயம்
எதிர்கால நிலைமைகளைக் கணித்துள்ள ஹர்ஷ டி சில்வா, நாணயச் சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கு அடுத்த வாரத்திற்குள் வட்டி வீதங்களை (Interest rates) 50 முதல் 100 அடிப்படை புள்ளிகளால் (Basis points) அதிகரிக்க வேண்டிய ஒரு கடுமையான கொள்கை ரீதியான முடிவை எடுக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
சந்தையின் நம்பிக்கையை மீட்டெடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தற்காலிகமாகத் தேவைப்பட்டாலும், இதன் பரந்த பொருளாதாரத் தாக்கம் அதிக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் அதிகரித்த நிதி அழுத்தங்கள் மூலம் பொதுமக்களையே பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். “வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டால், அரசாங்கம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும், அதன் இறுதி விளைவாகப் பொதுமக்கள் மீதான வரிகளும் அதிகரிக்கப்படும்” என அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.