போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பொல விதானலாகே சமந்த குமார என்ற ‘வெலே சுதா’வினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவொன்றை உயர் நீதிமன்றம் நேற்று (01) நிராகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிஸ்சை பகுதியில் 7.05 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில் வெலே சுதா என்பவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2015 அக்டோபர் 14 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது
இதற்கு முன்னர் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்திருந்தது. அதன் பின்னர், மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களினதும் தீர்ப்புக்களை செல்லுபடியற்றதாக்கி, தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் இந்த இறுதி மேல்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்குப் போதுமான சட்ட ரீதியான அடிப்படை இல்லை எனத் தீர்ப்பளித்து மனுவை நிராகரித்ததுடன், மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பை அவ்வாறே உறுதி செய்தது