வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நோவா ஸ்கோஷியாவின் (Nova Scotia) போர்ட்டர்ஸ் லேக் (Porters Lake) பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் 2SLGBTQIA+ சமூக நிகழ்வு ஒன்றிற்கு எதிராக இந்த இளைஞர் வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை புலனாய்வாளர்களுக்குத் தெரியவந்ததாக ஆர்சிஎம்பி (RCMP – Royal Canadian Mounted Police) தெரிவித்துள்ளது.
“குறிப்பிட்ட அந்த இளைஞர் மற்றொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்த கருத்துக்கள், வேறொரு குறிப்பிட்ட அடையாளத்தைக் கொண்ட குழுவிற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தன. இந்த அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக அதிகாரிகள் உடனடியாக மேல்நடவடிக்கைகளை மேற்கொண்டனர்” என்று நோவா ஸ்கோஷியா ஆர்சிஎம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், வெறுப்புப் பிரச்சாரம் (Hate propaganda) மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். அந்த சமூக நிகழ்வு நடைபெறவிருக்கும் பகுதியின் புவியியல் எல்லைகளுக்குள் நுழைவதற்கும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் கூடும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் அவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
“பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆர்சிஎம்பி எச்ஆர்டி (RCMP HRD) பிரிவு இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த நிகழ்வு ஹெலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸாரின் (HRP) அதிகார வரம்பிற்குள் வருவதால், பாதுகாப்புத் திட்டமிடலுக்கு ஆதரவளிக்கும் வகையில் தேவையான விபரங்கள் அவர்களுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன” என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.