வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
மேலும், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். அதுவரையில் வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது; வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் அரசு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக மாறி வருகிறது. எண்ணெய் வர்த்தகம் மூலம் நிதி திரட்டி, பயங்கரவாதம், போதைப்பொருள், மனிதக் கடத்தல் போன்ற செயல்களில் வெனிசுலா ஈடுபடுகிறது. அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும்.
அதுவரையில், வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிகளவிலான கடற்படையினரால் வெனிசுலா முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர்கள் பார்த்திடாத வகையில் இந்த விவகாரம் இன்னும் மேலும் விரிவடையும், எனக் கூறினார்.