டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது.
வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் மூடியிருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள மணல் அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியாவது குறித்த மணலை அகழ்ந்து அகற்ற வேண்டும். அதன் மூலமே மீளவும் இந்நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இதற்கான உதவிகளை எமக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் பற்றி திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசனிடம் வினவியபோது
“வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும்.அகழும் செலவை உரிய விவசாயிகள் மணலை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் சிறிது தாமதித்து அடுத்த போகத்திற்கு முன்னர் மணல் அகழும் நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும்”எனவும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பதிலளித்தார்.