ரவிகிரண் கோலா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ‘ரவுடி ஜனார்த்தனன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தினை ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கிரிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இதன் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும், ரூ. 20 கோடி வரை சம்பளம் தர படக்குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ‘உபேனா’ படத்துக்குப் பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.