மட்டக்களப்பு, புனானை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில், சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி, வாழைச்சேனை–கொழும்பு வீதியில் புனானையில் அமைந்துள்ள பூட்டியிருந்த வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று, அதற்கான மூன்று தோட்டாக்கள், துளையிடும் கருவி (ரில்லர்), எரிவாயு அவன் மற்றும் மின்விசிறி ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, திருடப்பட்ட துப்பாக்கி அந்தப் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புனானை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்விசிறி உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டன. திருட்டுப் பொருட்களை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.