வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டில் அதீத ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றது. அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகச் செயற்படுவது மிகுந்த கவலைக்குரியது. உடனடியாக இவ்வாறான அதிகாரத்துவ முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட முன்வர வேண்டும், என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், யாழ்ப்பாணத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு மாகாணத்தை இலங்கையின் முதன்மைச் சுற்றுலா மையமாக மாற்றுவோம் என உறுதியளித்திருந்தேன். அதனைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களை மாகாணப் பணியகத்துக்குப் பரவலாக்க வேண்டும். குறிப்பாக, சிறிய அளவிலான சுற்றுலா விடுதிகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தையாவது மாகாணத்துக்கு வழங்குவது பணிகளைத் துரிதப்படுத்தப் பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோர் சுற்றுலாவிகளின் தற்போதைய மனநிலை மற்றும் முதலீட்டாளர்களின் ஏமாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
‘சுற்றுலாவிகள் வெறும் கடல் நீராடலுக்காக மட்டும் இங்கு வருவதில்லை. அவர்கள் சாகச விளையாட்டுகள் மற்றும் பல்வேறு புதிய பொழுதுபோக்கு அம்சங்களையே எதிர்பார்க்கின்றார்கள். மாலைதீவு போன்ற நாடுகளில் சிறு தீவுகளிலும் கடலின் நடுவிலும் குடில்களை அமைத்துச் சுற்றுலாவிகளை ஈர்க்கின்றார்கள். வடக்கிலும் அத்தகைய அற்புதமான சூழலும் தீவுகளும் உள்ளன. ஆனால், சுற்றுலா மையங்களை அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் நீண்டகாலத் தாமதங்கள் காரணமாக, ஆர்வத்துடன் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தச் சிவப்பு நாடா நடைமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்’ என வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகளால் மாகாணத்தின் சுற்றுலா வலையமைப்புத் திட்டங்கள் குறித்த விசேட முன்னளிக்கை செய்யப்பட்டது.
திட்டமிட்ட மற்றும் நிலையான முறையில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கருப்பொருள் உல்லாச விடுதிகளை உருவாக்கும் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ‘கருப்பொருள் சுற்றுலாத் தளங்களாக’ அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும், அதன் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்பது அதிகார சபையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.
சுற்றுலா சார்ந்த முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் ‘ஒரே நிறுத்தச் சேவை’ பொறிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இவ்வாறான கருப்பொருள் உல்லாச விடுதிகள் திட்டங்கள் செயற்படுத்தப்படும்போது, ஏனைய அரச திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இலகுவாக்கப்படுவதுடன், அப்பகுதிகளில் சுற்றுலாவிகளின் வருகையும் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மன்னார் மற்றும் நெடுந்தீவில் இந்தத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அதிகார சபையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான ஆதரவையும் நிர்வாக ரீதியான உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.
.