வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார இயங்குகையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 இளம் அரசியல் தலைவர்கள் இன்றைய தினம் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இவ்விஜயத்தின் ஓரங்கமாக காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் உள்ளடங்கலாக வடக்கில் உள்ள முக்கிய இடங்களுக்கு களவிஜயங்க்ளை மேற்கொள்ளவுள்ள அரசியல் தலைவர்கள், இனநல்லிணக்கம், துறைமுக அபிவிருத்தி என்பன தொடர்பான பரந்துபட்ட கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளனர்.
‘கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட்’ (சகரையும் உள்ளடக்கிய மாற்றத்துக்கான கூட்டிணைவு) அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் கடந்த ஜுலை மாதம் 14 – 25 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து இளம் அரசியல் தலைவர்கள் வட பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் இயங்குகையைப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் வட மாகாணத்துக்கான விஜயமொன்றை ஏற்பாடு செய்யுமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அக்கட்சியுடன் இணைந்து கோலிஷன் ஃபோர் இன்க்லூஸிவ் இம்பக்ட் அமைப்பு மேற்படி வடக்கு விஜயத்தை ஒழுங்கு செய்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இளம் அரசியல் தலைவர்கள் அடங்கிய குழுவினர் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து கட்சிகளுக்கு இடையிலான அரசியல் கலந்துரையாடல்கள், முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய கூட்டிணைந்த கொள்கைகளை அடையாளங்காணல், களவிஜயங்கள் போன்றவற்றில் பங்கேற்கவுள்ளனர்.
வடக்கின் நிலைவரம் மற்றும் உண்மைகள் தொடர்பில் நேரடியாக அறியாத கொழும்பு அரசியல்வாதிகள் நல்லிணக்கம், காணி உரிமை, பொருளாதார உள்ளீர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேசிய ரீதியில் இடம்பெற்றுவரும் வாத, பிரதிவாதங்கள் குறித்து விரிவாhகப் புரிந்துகொள்வதற்கு இந்த விஜயம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சித்ரால் பெர்னாண்டோ, அமில பிரசாத் சிறிவர்தன, சமிந்த்ரனி கிரியெல்ல, சத்துர கலபத்தி ஆகியோரும், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் எம்.ஐ.மொஹமட் ஆத்தீஃப்பும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் காசிலிங்கம் கீத்நாத், மிலிந்த ராஜபக்ஷ, சமன்பிரிய ஹேரத் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பியன் குருகேவும், பிவிதுரு ஹெல உறுமய சார்பில் அஞ்சன உதாரவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கனிஷ்டா மைக்கேலும், சர்வ ஜன சக்தி சார்பில் ராஜித ஹப்புஆராச்சியும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் எம்.சந்திரகுமாரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஏ.ஆர்.மொஹமட் அஸ்மியும், இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் நிதன்ஷன் மற்றும் மயூரன் ஆகியோரும் வடக்குக்கான இப்பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு புறப்படவுள்ள இக்குழுவினர், இன்று மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துபசாரத்திலும், வடக்கின் அரசியல், பொருளாதார நிலைவரம் மற்றும் அதில் இந்திய – இலங்கை கூட்டாண்மையின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் வடக்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்ற தலைவர்களுடனான கலந்துரையாடல், காங்கேசன்துறை துறைமுக விஜயம், சந்தை தொடர்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், பலாலி விமானநிலைய விஜயம், யாழ் பொது நூலக விஜயம், புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் மாணவத்தலைவர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இவ்விஜயத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இவ்விஜயத்தில் தமது கட்சியின் சார்பில் இந்தியாவுக்குச் சென்ற 6 உறுப்பினர்கள் பங்கேற்பர் என ஆளும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டிருந்த போதிலும், இச்செய்தி எழுதும் நேரம் வரை அக்கட்சியின் சார்பில் எந்தவொரு உறுப்பினரதும் பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.