‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளில் நிதி விதிமுறைகளை மீறி, தனது ஆதரவாளர்களுக்கு பணம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் இருக்கும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவை, வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை(10) கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் மேலதிக அறிக்கையொன்றைத் தாக்கல் செய்து இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இவ்விடயம் தொடர்பில், மன்றில் மேலதிக விபரங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, மொரட்டுவை மாநகர சபைக்குள் பிரவேசிக்க கூடாது என்ற பிணை நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தும், சந்தேகநபர் அதனை மீறி செயற்பட்டுள்ளதால், அவரை வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு அல்லது மீண்டும் அந்த நிபந்தனையை கடுமையாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆணைக்குழு சார்பில் முன்னிலையான உதவி சட்டப் பணிப்பாளர் கித்மிணி வீரக்கொடி , சந்தேகநபர் மாநகர சபைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும், அந்த நிபந்தனையை மீறி அவர் செயற்பட்டுள்ளார். இது சாட்சியாளர்களுக்கும் சாட்சியங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 70வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 113(அ) பிரிவின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாத்திரம் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபர் அதனைத் தவறாகப் பயன்படுத்தி அடிக்கடி மாநகர சபைக்குச் சென்றுள்ளார் என நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
சந்தேகநபர் அடிக்கடி மாநகர சபைக்கு வருவதாக மாநகர ஆணையாளர் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் மாநகர சபையிலேயே உள்ளன. இது குறித்து மாநகர ஆணையாளர் மனோஜா சிரோமணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் சுரேஜ் இந்திரஜித் ஆகியோர் மொரட்டுவை தலைமையக பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, எனது சேவைபெறுநர் கூட்டங்கள், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மாநகர சபைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் அவர் சொத்து தொடர்பான வரி செலுத்துவதற்காகவே அங்கு சென்றார். சாட்சியங்களுக்கு அழுத்தம் கொடுக்க மாநகர சபைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை, வெளியிலும் அதனைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கருத்திற்கொண்ட நீதிவான் ,மொரட்டுவை மாநகர சபைக்குச் செல்லக்கூடாது என்ற பிணை நிபந்தனையைத் தளர்த்துவது விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சாட்சியங்களுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் மற்றும் அதற்குத் துணை நின்றவர்கள் எவரேனும் இருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், பிணை நிபந்தனை குறித்த விபரங்களை மாநகர ஆணையாளருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், சாரக முனிசிங்க மற்றும் சஜித் புஷ்பகுமார உள்ளிட்ட அனைத்து சாட்சியாளர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை விரைவுபடுத்துமாறும், பெப்ரவரி 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் சந்தேகநபர் மாநகர சபைக்குச் சென்று மேற்கொண்ட விடயங்கள் குறித்த உண்மைத்தன்மை வாய்ந்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் பிணை நிபந்தனைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும், அதுவரை மாநகர சபை உறுப்பினர்கள் அல்லது ஊழியர்களுடன் எவ்வித தொடர்புகளையும் பேணக்கூடாது என்றும் நீதிவான் சந்தேகநபருக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், விசாரணைகள் முடியும் வரை மொரட்டுவை மாநகர சபைக்குள் நுழையவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டும் என நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.