ஒரு வருட காலப்பகுதிக்குள் 24 கோடி ரூபாவிற்கும் அதிக முறையற்ற சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அசாங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான முன்னாள் எம்.பி யை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து கட்டளையிட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு சந்தேகநபர் ஒத்துழைப்பு வழங்குவதையும், அவரது மகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ளமையையும் ஒரு விசேட காரணியாக கருதி பிணை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
சந்தேகநபர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் 27 முறை தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டமை மற்றும் தனது வருமானத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 24,38,50,942 ரூபாயை செலவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.