முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் நிலைமையைச் சாதுரியமாகக் கையாண்டிருப்பார். எனவே நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியின் அனுபவமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய பல்துறைசார் நிபுணத்துவக் குழுவொன்றை அரசாங்கம் உடனடியாக நியமிக்க வேண்டும் என சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் எரிபொருள்; விலையைக் குறைத்துள்ளன. ஆனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியமை, தரம் குறைந்த நிலக்கரி மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை போன்ற கின்னஸ் சாதனைகள் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையே சேரும்.
பெப்ரவரி 28 முதல் மே 31 வரையிலான காலப்பகுதியில், உலகிலேயே மிக அதிக சதவீதத்தில் டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்திருப்பது இலங்கை அரசாங்கமாகும். இதன் மூலம் டீசல் 13.9 சதவீதத்தாலும், பெற்றோல் 127.6 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்தியுள்ளன. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திலுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட எரிபொருள்; விலையைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு அதன் பலனை வழங்கியுள்ளன.
ஈரான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே எரிபொருள்விலை அதிகரித்தது என்று அரசாங்கம் கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும். தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட சுமார் 100 பில்லியன் டொலர் இழப்பு, அதிக விலைக்கு எரிபொருள்; வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணங்களாகும்.
உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை இதனாலேயே ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே எம்மால் சேமிக்க முடியும் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் அதற்கு முந்தைய வாரங்களில் உலக சந்தையில் மசகு எரிபொருள்; விலை குறைவாக இருந்த போது ஏன் விலையைக் குறைக்கவில்லை? எனவே, ஜனாதிபதிக்கோ அல்லது மின்சக்தி அமைச்சருக்கோ எரிபொருள்விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்தவொரு புரிதலும் இல்லை.
தற்போது அரசாங்கம் சில நிறுவனங்களின் மாஃபியாக்களிடம் சிக்கியுள்ளதுடன், அதிக விலைக்கு எரிபொருள்; வாங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது. காஞ்சன விஜேசேகர அமைச்சராக இருந்தபோது நிறுவனங்களின் தரகுப் பணம் அவரது சட்டைப் பைகளுக்குள் செல்வதாக ஜனாதிபதி கூறினார். தற்போது அந்த சட்டவிரோத இலாபம் யாருடைய சட்டைப் பைக்கு அல்லது எந்தக் கணக்கிற்குச் செல்கிறது என்பதை ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
அடுத்த கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் விலை மற்றும் வரிகளை அதிகரிக்க உடன்பாட்டை தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் அரசாங்கம் நாட்டை சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்துள்ளது. நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சரியான பார்வையான திறமையோ இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார். நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பார். மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் தற்போது பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதனை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னாயத்தங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அன்றாட நிலைமைக்கு ஏற்பவே தற்காலிகமாகச் செயற்படுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி இதற்குப் பொருத்தமான ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, எதிர்க்கட்சியில் இருக்கும் அனுபவமிக்க அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைக் கையாள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.