இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது
கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கனகர் கிராம மக்களின் காணியினை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து மீட்டுத் தருமாறு கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான ஐந்து வருட போராட்டத்தை தொடர்ந்து கனகர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் 202 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாக இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அரசு விடுவித்த கனகர் கிராம மக்களின் காணியை பகிர்ந்தளிப்பதற்காக 202 பேர்களுடைய பெயர் விபரம் பரிந்துரைக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இருந்த போதிலும் 2023 ஆண்டு அதில் 73 குடும்பங்கள் முதல் கட்டமாக குடியமர்த்தபட்டுள்ளதாகவும் மீதியாக உள்ள எமக்கு குடியிருப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
எனவே அரசாங்கம் விடுவித்த எமது காணியில் நாம் மீள் குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியுடன் அரசாங்கம் விடுவித்த எமது காணியை எமக்கு கையளிக்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எமது காணி எமக்கு வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோசங்களோடு முன்னெடுத்த இந்தப் போராட்டம் 23.03.2026 நேற்று காலை 10 மணியில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் பொத்துவில் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கையளித்திருந்தனர்.