சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ் குளூனி” போன்ற அவரது வசீகரமான ஆளுமையாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும், பிரதமர் மார்க் கார்னி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார். இம்முறை டைம் (Time) சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde) மூலம் இந்தப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட கார்னி, டைம் சஞ்சிகையின் ‘தலைவர்கள்’ (Leaders) பிரிவில் உள்ள 24 நபர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“நிதி உலகின் ஜார்ஜ் குளூனி”
வங்கித் துறையில் “நிதி உலகின் ஜார்ஜ் குளூனி” மற்றும் “ராக்-ஸ்டார் மத்திய வங்கி ஆளுநர்” என அழைக்கப்படும் அவரது புனைப்பெயர்களைக் குறிப்பிட்ட லகார்ட், பல தசாப்தங்களாக இருந்து வந்த சர்வதேச ஒத்துழைப்பு (Multilateralism) முறிவடையும் நிலையை கார்னி முன்கூட்டியே கண்டறிந்ததே அவர் இந்தப் பட்டியலில் இடம்பெற முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.
“2025 இல் பிரதமரான பிறகு, நாம் பல தசாப்தங்களாக அறிந்திருந்த சர்வதேசக் கூட்டமைப்புகளின் உடைவுப் புள்ளியை முதலில் அடையாளம் கண்டவர் கார்னி தான். இப்போது அவர் அனைவரது பொது நலனுக்காகவும் புதிய முறையிலான ஒத்துழைப்பை மீள உருவாக்குவார் என்று நான் நம்புகிறேன்,” என லகார்ட் டைம் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.
இந்தப்பட்டியலில் கார்னியுடன் சேர்த்து போப் 14 ஆம் லியோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அரசியல் எழுச்சி
ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து கார்னி ஆட்சிக்கு வந்தார். 2025 மார்ச் மாதம் நடைபெற்ற கட்சித் தலைமைத் தேர்தலில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் ஒரு மாதத்தில் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்த அவர், அண்மையில் ஏனைய கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் இணைந்தமை மற்றும் ஒன்டாரியோ, கியூபெக் இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் தற்போது பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளார்.
டாவோஸ் உரையும் ட்ரம்ப்பின் எதிர்ப்பும்
இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் அவர் ஆற்றிய உரை உலக நாடுகளிடையே, குறிப்பாக நடுத்தர வல்லமை கொண்ட நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. “பழைய ஒழுங்குமுறை இனி திரும்பாது என்பதை நாம் அறிவோம். அதற்காக நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏக்கம் என்பது ஒரு தந்திரோபாயம் அல்ல. ஆனால் இந்த உடைவுகளிலிருந்து நாம் சிறந்த, வலிமையான மற்றும் நீதியான ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்,” என அவர் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், இந்த உரையை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக விமர்சித்தது. “அமெரிக்காவினால் தான் கனடா உயிர்வாழ்கிறது. மார்க், அடுத்த முறை நீங்கள் கருத்துச் சொல்லும்போது அதை நினைவில் கொள்ளுங்கள்,” என அதிபர் ட்ரம்ப் நேரடியாகவே சாடியிருந்தார்.
வரலாற்றுப் பின்னணி
பிரதமர் பதவியை ஏற்கும் முன், மார்க் கார்னி கனடா மத்திய வங்கி (Bank of Canada) மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி (Bank of England) ஆகியவற்றின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.
கனடியப் பிரதமர் ஒருவர் இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பது 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு (ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்) இதுவே முதன்முறையாகும். 2016 இல் ட்ரூடோ மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.