பீல் பிராந்தியம் (கனடா): மிசிசாகா நகரில் பாதசாரி ஒருவர் மீது மோதிவிட்டு, நிறுத்தாமல் தப்பியோடிய (Fail-to-remain) கொடூர வாகன விபத்துச் சம்பவம் குறித்து பீல் பிராந்திய பொலிஸின் பிரதான விபத்து புலனாய்வுப் பிரிவினர் (MCB) பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 05) காலை 6:00 மணியளவில், எரின் மில்ஸ் பார்க்வே (Erin Mills Parkway) மற்றும் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) சந்திப்பில் பாதசாரி ஒருவர் விபத்துக்குள்ளாகியிருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதிவேகமாக வந்த 2015-2020 காலப்பகுதிக்குரிய வெள்ளை நிற ‘மெர்சிடிஸ் ஜிஎல்ஏ 250′ (Mercedes GLA 250) அல்லது ’45 சீரிஸ்’ (45 Series) ரக கார் ஒன்று, எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் கிழக்கு நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது, அங்குள்ள சிக்னலில் சிவப்பு விளக்கை மீறி (சிகப்பு சிக்னலை உடைத்து) சென்ற அந்த கார், பாதசாரிகளுக்கான கடவையில் (Crosswalk) வீதியைக் கடக்க முயன்ற 38 வயதுடைய பெண் பாதசாரி மீது பலமாக மோதியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர், காரை நிறுத்தி அந்தப் பெண்ணின் நிலைமையைக் கண்டறிய எவ்வித முயற்சியும் செய்யாமல், எக்லிண்டன் வீதி வழியே சம்பவ இடத்திலிருந்து அதிவேகமாகத் தப்பியோடியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மிசிசாகா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்புப் கேமரா (CCTV) காட்சிகளைப் புலனாய்வாளர்கள் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். அத்துடன், விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் எவரேனும் தங்களது வாகன டேஷ் கேமராக்களிலோ (Dash camera) அல்லது கைபேசிகளிலோ சந்தேகத்திற்குரிய இந்த வாகனம் அல்லது விபத்து தொடர்பான காட்சிகளைப் பதிவு செய்திருந்தால், அவற்றை உடனடியாகப் பரிசீலித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலும், வாகனப் பழுதுபார்ப்பு நிலையங்கள் (Automotive repair facilities) மற்றும் பாடி ஷாப்கள் (Body shops), தங்களது நிலையங்களுக்கு முன்பக்க சேதங்கள் அல்லது உடைந்த முகப்புக்கண்ணாடி (Windshield) போன்ற விபத்துக்குரிய சேதங்களுடன் ஏதேனும் வெள்ளை நிற மெர்சிடிஸ் கார் கொண்டுவரப்பட்டால், அது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நாளுக்குப் பின்னர் தங்களது அக்கம் பக்கத்தில் இத்தகைய விபத்துச் சேதங்களுடன் கூடிய வெள்ளை நிற மெர்சிடிஸ் காரைக் கண்டாலோ, அல்லது வழக்கமாக நிறுத்தப்படும் கார் ஒன்று விபத்தின் பின்னர் காணாமல் போயிருந்தாலோ உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர், உடனடியாகத் தனது சட்டத்தரணியை அணுகி, பொலிஸாரிடம் சரணடையுமாறு பொலிஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது காணொளிகள் வைத்துள்ளவர்கள், பிரதான விபத்து புலனாய்வுப் பிரிவினரை (MCB) 905-453-2121 (ext. 3710) என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.