மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், மத்தல சர்வதேச விமான நிலையத்தைத் தரையிறக்கக் கட்டணமின்றிப் பயன்படுத்துவதற்குப் பல விமான நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, எமிரேட்ஸ் (Emirates), கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த ஏனைய விமான நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதிகரித்து வரும் தேவையைக் கருத்திற்கொண்டு, டர்கிஷ் ஏர்வேஸ் (Turkish Airlines) நிறுவனம் கட்டுநாயக்கவிற்கான தனது விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஒரு மாற்று விமான போக்குவரத்து பரிமாற்ற மையமாக (Alternative Aviation Transit Hub) நிலைநிறுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் கடந்த வாரம் தொடங்கின.
மோதல் வலயங்களிலிருந்து விலகி அமைந்துள்ளமை மற்றும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380 (Airbus A380) ரக விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட இலங்கையின் ஒரே விமான நிலையம் இது என்பதால், மத்தல விமான நிலையம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த முன்முயற்சியின் மூலம், மத்திய கிழக்குச் சூழலால் உருவாகும் புதிய வணிக வாய்ப்புகளைக் கைப்பற்றுவதையும், அதேவேளைப் பாதிப்படைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கும், மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்ட நஷ்டங்களிலிருந்து மீள்வதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.