சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்காமல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமை செலுத்த முன்வர வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினையான வீட்டு வன்முறை காணப்படுகிறது. பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும் வன்முறைகளையும் சகித்துக்கொண்டு முடங்கிப் போய்விடக் கூடாது. குறிப்பாக, 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஏனைய சட்டப் பிரிவுகள் குறித்தும் பெண்கள் போதிய விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.
எமது அரசாங்கத்தின் கீழ் வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கென விசேட ஆலோசனை மையங்கள் 11 மாவட்டங்களில் நிறுவப்பட்டன. அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலும் ஒரு மையம் திறந்து வைக்கப்பட்டது. இவற்றின் மூலம் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனவள ஆலோசனை வழங்கப்படுவதோடு, சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
பல பெண்கள் தங்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதே தெரியாமல் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தயக்கமின்றி பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவை அணுகி சட்ட உதவியைப் பெற வேண்டும். ஒரு பெண் பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்கும் பலத்தைப் பெறும்போதுதான் அவரால் வன்முறைகளிலிருந்து விடுபட முடியும். இதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள், சிறு தொழில் முயற்சி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட வாழ்வாதார உதவிகள் எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்படும் குறைந்த வட்டி வீதத்திலான கடன் வசதிகளைப் பெண்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தையல் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த சிறு தொழில்களில் ஈடுபட்டுத் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பிரத்தியே திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சட்ட ரீதியான விழிப்புணர்வும் பொருளாதாரச் சுதந்திரமும் இணையும்போதுதான் பெண்களால் உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடாமல், பெண்களின் உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றார்.