மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் மோதல் நிலைமைகள் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 114.75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளதுடன், ஈராக்கிற்கான ஏற்றுமதி 38 சதவீதத்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) ஏற்றுமதி 93 சதவீதத்தாலும் பாரிய சரிவைக் கண்டுள்ளதாக ‘ரொயிட்டர்ஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும், சுமார் 2.4 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான தேயிலை கைத்தொழில், இந்த மோதல்களினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதியில் தோராயமாக 680 மில்லியன் டொலர் பெறுமதியான பாதியளவிலான ஏற்றுமதி, மத்திய கிழக்கு நாடுகளை நோக்கியே அமையப் பெறுகின்றமை இதற்குக் காரணமாகும்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வீழ்ச்சியானது, ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தவித்து வரும் பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கொழுந்து பறிக்கும் தொழிலாளியான ஜெசிந்தா மலர் என்பவர் ரொயிட்டர்ஸ் ஊடகத்திடம் தனது நிலைமையைக் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாகத் தான் எரிவாயு (Gas) அடுப்பில் சமைப்பதைக் கைவிட்டு, விறகு அடுப்பிற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார். இவரைப் போன்ற மில்லியன் கணக்கான மக்கள் இத்துறை மீதே தங்கியுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 1,350 ரூபாய் முதல் 1,750 ரூபாய் வரையே வருமானமாகப் பெறுகின்றனர். இது இலங்கையின் உத்தியோகபூர்வ நாளாந்த குறைந்தபட்ச ஊதியமான 1,200 ரூபாயை விட சற்று மட்டுமே அதிகமாகும். இதனால், பாதிக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் உலக வங்கியின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் குறித்துப் பேசிய பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் அழைப்பாளர் தங்கவேல் கணேசலிங்கம், தோட்டத் தொழிலாளர்கள் “நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளைச்” சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, பிள்ளைகளின் பாடசாலை வரவு குறைவடைந்துள்ளதாகவும், தொழிலாளர்கள் போதிய உணவின்றி உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதுடன், மாற்று வழிகளைத் தேடித் தோட்டங்களை விட்டு வெளியேறி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
விநியோகத் தடைகளும் ஈரான் சந்தையும்
இலங்கையிலிருந்து வருடாந்தம் 8 மில்லியன் முதல் 10 மில்லியன் கிலோகிராம் வரையான உயர்தரத் தேயிலையை (Premium tea) இறக்குமதி செய்யும் ஈரானுக்கான ஏற்றுமதி குறித்தும் தற்போதைய சூழலில் பெரும் கவலை எழுந்துள்ளது.
இதேவேளை, உலகப் புகழ்பெற்ற ‘டில்மா’ (Dilmah) தேயிலை நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தில்ஹான் பெர்னாண்டோ ரொயிட்டர்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவிக்கையில், இந்த மோதல்களினால் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்பு (Logistics) சீர்குலைந்துள்ளதோடு, எரிபொருள் செலவீனங்களும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த புவிசார் அரசியல் நெருக்கடியானது, தேயிலைத் துறையை மட்டுமன்றி, இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் அதிக எரிசக்தி செலவீனங்கள் மற்றும் விநியோகத் தடைகள் போன்ற பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ரொயிட்டர்ஸ் தனது விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.